தி.மு.கவின் இறுதிக் காலம் நெருங்கி விட்டது .. த.மா.கா
சென்னை:
தி.மு.க. வுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. அணையும் விளக்கு பிரகாசமாக எரிவதைப்போல அதன் நிலைமை உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, டி.சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.
நான்கு பேரும் சேர்ந்து சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில தினங்களாக முதல்வர் கருணாநிதி பேசி வருவதும், அவர்களுடைய இயக்க ஏடான முரசொலியில் எழுதிவருவதும், ஆளும் கட்சிநடவடிக்கைகள் ஜெர்மனி சர்வாதிகார ஆட்சியின் இறுதி நாட்களை நினைவுபடுத்துகின்றன.
நூற்றி ஐம்பது கொலைகளைச் செய்த சந்தன கடத்தல் வீரப்பனை கைது செய்யமுடியாமல் அவனிடம் கைபொத்தி, வாய்பொத்தி நிற்கிறது தமிழக அரசு.
கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தால் கைது செய்யும் படி தாக்கீது பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை கைதுசெய்யாத கையாலாகாகத அரசு, ஏழை, எளிய மக்களுக்காக போராடுகின்ற அறப்போராட்ட தொண்டர்களைக் கைது செய்து ஆறுமாத சிறையில்வைப்பேன் என்று சொல்வது சர்வாதிகாரத்தின் உச்சகட்டம் ஆகும்.
ஏழை விவசாயிகளுக்காக குரல் கொடுத்த மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்களை போலீஸ் மூலம் மிருகத்தனமாக தாக்கி அதைதனது தொலைக்காட்சியிலேயே பகிரங்கமாக படம் பிடித்துக்காட்டி, மற்ற கட்சித் தொண்டர்களை பயமுறுத்த நினைப்பது எவ்வளவு பெரிய கொடுமைஎன்பதனை முதல்வர் வெகுவிரைவில் உணர்ந்து கொள்வார்.
அறப்போராட்ட வீரர்களுக்கு ஆறு மாத ஜெயில் தண்டனை என்பது மிரட்டல் அரசியலின் உச்சகட்டம். அரசியல் வாதிகளுக்கும், கிரிமினல்குற்றவாளிகளுக்கும் இடையே முதல்வருக்கு வேறுபாடு தெரியவில்லை போலும்.
நடப்பது சட்ட ஆட்சி. எனவே அனைத்துப்பிரச்சனைகளுக்கும் சட்டத்தின் வழியிலேயே தமிழ்மாநில காங்கிரஸ் தீர்வு காணும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தி.மு.க ஆட்சி இறுதி காலத்தை நெருங்கிவிட்டது. அணையப்போகும் விளக்கு சுடர்விட்டு பிரகாசமாக எரிவதைப்போல, தி.மு.க ஆட்சியின் நிலை உள்ளதுஎன்று த.மா.கா தலைவர்கள் கூறியுள்ளனர்.