யார் பயிற்சியாளர்: கிரெக் சேப்பல் அல்லது ஜான் ரைட்?
ஷார்ஜா:
இந்திய அணிக்கான பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரெக் சேப்பல் அல்லது நியூசிலாந்து அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஜான்ரைட் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கபில்தேவ் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து அவர் அப் பதவியை ராஜினாமாசெய்தார். தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக கெய்க்வாட் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்திய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிப்பது என்று முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் கிரெக் சேப்பல், மார்ஷ், டீன் ஜோன்ஸ், நியூசிலாந்து வீரர் ஜான் ரைட் ஆகியோரது பெயர்கள்பரிசீலிக்கப்பட்டன. ஆனால், பயிற்சியாளர் பதவிக்கு தங்களது பெயர்களைப் பரிசீலிக்கவேண்டாம் என்று மார்ஷ், ஜோன்ஸ் இருவரும் கூறிவிட்டனர்.
இதனால் கிரெக் சேப்பல், ஜான் ரைட் ஆகியோர் மட்டுமே மீதமுள்ளனர். இருவரில் ஒருவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்றுஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் லேலே தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கிரெக் சேப்பல், ஜான் ரைட் இருவரும் அக்டோபர் 22-ம் தேதி சென்னை வருகின்றர். மறுநாள் வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா உள்பட வாரியஅதிகாரிகளை அவர்கள் சந்தித்துப் பேசுகின்றனர்.
இந்திய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிப்பது குறித்து வீரர்களின் கருத்துக்களைக் கேட்டோம். அவர்களிடமிருந்து நல்ல பதில்தான் கிடைத்துள்ளது.அதனால், வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிப்பதில் வாரியம் முனைப்புடன் உள்ளது.
இந்தியாவிலேயே நல்ல பயிற்சியாளர்கள் இருக்கிறார்களே, பின் எதற்கு வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிக்கிறீர்கள் என்று பலர் கேள்விஎழுப்புகின்றனர்.
ஏற்கெனவே சந்தீப் பாட்டீல், மதன் லால் போன்றவர்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளனர். ஒரு மாறுதலுக்கு வெளிநாட்டுப்பயிற்சியாளர்களை நியமித்துப் பார்க்கலாமே என்ற எண்ணத்தில்தான் இம் முடிவை வாரியம் எடுத்துள்ளது.
வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதுள்ள நிலையில் வெளிநாட்டுப் பயிற்சியாளரின்பதவிக் காலம் எவ்வளவு என்பதைச் சொல்லமுடியாது.
அது அவர்களது செயல்பாடு அல்லது நிர்ணயிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட காலவரையைப் பொறுத்தது. எல்லாம் சேப்பல் மற்றும் ஜான் ரைட் இருவரிடமும்நடத்தும் ஆலோசனையின் முடிவைப் பொறுத்துள்ளது.
நியமிக்கப்படும் வெளிநாட்டுப் பயிற்சியாளருக்கு உதவியாக மற்றொரு கோச் இப்போதைக்கு நியமிக்கப்படமாட்டார். புதிய பயிற்சியாளர் நவம்பர் 1-ம்தேதி பதவியேற்றுக் கொள்வார்.
நைரேபி கிரிக்கெட்டில் இந்திய அணியின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது. அதனால்தான் அதே அணியையே ஷார்ஜா போட்டிக்கும் வாரியம் தேர்வுசெய்தது.
ஐ.சி.சி. கோப்பை போட்டியில் இறுதியில் தோற்று கோப்பையை கோட்டை விட்டாலும், ஷார்ஜா கோப்பையை இந்தியா நிச்சயம் கைப்பற்றும் என்றுநம்புவதாகத் தெரிவித்தார் லேலே.