யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை திட்டம்
கொழும்பு:
யாழ்ப்பாணத்திற்கு, 7 மாத கால இடைவெளிக்குப் பிறகு வர்த்தக ரீதியிலான விமானங்களை இயக்க இலங்கை விமானப் படை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சனத் கருணாரத்னே கூறியதாவது:
கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு தினமும் ஏ.என். 32 ரக விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் 300 க்கும் மேற்பட்ட பயணிகள்பயன்பெறுவார்கள்.
கடந்த மார்ச் மாதம் முதல், பாதுகாப்பு அமைச்சகம் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்திருந்தது. இதனால்இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் விமானம் ஒன்று அனுராதபுரா பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 36 பேர் கொல்லப் பட்டனர். மேலும் 4 விமானஊழியர்களும் கொல்லப்பட்டனர். இவ்விபத்து, புலிகளின் திட்டமிட்ட தாக்குதலால் ஏற்பட்டது என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பைலட்டின்கவனக் குறைவால்தான் விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக விசாரணையில் தெரிய வந்தது.
தற்போது யாழ்ப்பாணத்துக்கு விமானத்தை இயக்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தாது என்றுநம்பலாம் என்றார் சனத் கருணாரத்னே.
1998 ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனியார் விமானம் ஒன்றை விடுதலைப்புலிகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதில் 48 பயணிகளும், 3 விமானஊழியர்களும் பலியானார்கள். இச்சம்பவத்தையடுத்து தனியார் விமானங்கள் இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.