"நிலச்சரிவு நிச்சயம் ஏற்படும்!" பல முறை எச்சரித்தும் யாரும் கண்டுக்கல! வயநாட்டில் பகீர் திருப்பம்
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில் தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த விபத்து எதிர்பாராத ஒன்று அல்ல என்றும் ஏற்கனவே பல முறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட பேரிடர் என உள்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது நாடு முழுக்க தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியிருந்தது.

முன்கூட்டியே எச்சரிக்கை
இதற்கிடையே வயநாடு சுரங்கப்பாதை கட்டுமானம் நடக்கும்போதே, அங்கு ஆபத்து அதிகம் இருப்பதாக புவியியல் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூன் 3 முதல் 11 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில் இந்த ரிப்போர்ட்டை கொடுத்துள்ளனர். அதில் சுரங்க நுழைவாயிலுக்கு மேல் அமைந்திருந்த மலைச்சரிவு பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, இடதுபுற சரிவில் சுமார் 35 மீட்டர் ஆழம் வரை தளர்வான சில்டி மண் அடுக்கு காணப்பட்டதாகவும், கனமழையால் அந்த மண் நீரை உறிஞ்சி எடை அதிகரித்தால் அது நிலைத்தன்மையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட, ஆய்வின்போதே பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு இருந்ததாக அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நேரடி எச்சரிக்கை
அதிலும் முக்கியமாக, மண் உள்ளே நீர் ஓடும் சத்தம் கேட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மலைச்சரிவின் உள்பகுதியில் நீர் பாதை உருவாகி மண்ணை உள்ளிருந்து அரித்துக் கொண்டிருப்பதற்கான அறிகுறி இதுவாகும். இதனால் எந்த நேரத்திலும் திடீர் சரிவு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த ரிப்போர்ட்டில் இடதுபுற சரிவு அதிக ஆபத்தான பகுதி எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழை இருந்தால் எந்த நேரத்திலும் திடீர் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று நேரடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஜூன் 5, 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சுரங்கப் பணிக்காக வெடிகள் வைக்கப்பட்டன. எனினும், அதனால் ஏற்பட்ட அதிர்வுகள் பாதுகாப்பு வரம்புக்குள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மண் சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே செயல்பட்டு வந்த கான்கிரீட் கலவை நிலையம் மற்றும் கனரக வாகன போக்குவரத்தும் அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் என்பதால் அதை வேறு இடத்திற்கு மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
பதில்
அதாவது மண் சரிவு ஏற்படுவதற்கு மிக மிக வாய்ப்பு அதிகமாகவே இருந்துள்ளது. இது தொடர்பாக நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை எதையும் கண்டுகொள்ளாமல் விட்டதே விபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த ரிப்போர்ட் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், கண்டிராக்ட் எடுத்த கொங்கண் ரயில்வே தரப்பு பதிலளித்துள்ளது.
அங்குள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ரிப்போர்ட் கிடைத்தவுடன் வடக்கு நுழைவாயில் பகுதியில் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், மலைக்கு மேல்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தடுக்க முடியவில்லை. அதேநேரம் சுரங்கம் தோண்டும்போது கிடைத்த மணலை சேமிக்க அரசு மிக தாமதமாகவே நிலத்தை ஒதுக்கியது" என்றார்.
கலெக்டர் அலுவலகம்
அதாவது இந்த அறிக்கை விபத்து நிகழ்வதற்கு முன்பே பேரிடர் அபாயத்தைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தது. மேலும், அங்கு கொட்டப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதாவது வயநாடு நிலச்சரிவு முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்தாலும், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததே விபத்திற்குக் காரணமாக மாறியுள்ளது.














Click it and Unblock the Notifications