டிரம்ப்பை ஏமாற்றிய இஸ்ரேல்? கச்சிதமாக காய் நகர்த்திய நெதன்யாகு.. மீண்டும் வெடிக்கும் மோதல்!
வாஷிங்டன்: வளைகுடாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிடம் இருந்து அமெரிக்காவுக்கு போன உளவு தகவல் கவனம் பெற்றுள்ளது. அதாவது டிரம்ப்பை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் உளவுத் தகவலை அனுப்பிய நிலையில், அதன் பிறகே அமெரிக்கா மீண்டும் தனது தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த மோதல் கடந்த மாதம் தான் ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஆனால், அது சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஈரான் சதி
இதற்கிடையே திரைமறைவில் நடந்த சில விஷயங்கள் குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி செய்து வருவதாக உளவு தகவலை இஸ்ரேல் தான் அமெரிக்காவுக்கு கொடுத்ததாம். இந்த புதிய தகவல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டிரம்ப்பை குறிவைத்து ஈரான் சில காய்களை நகர்த்தி வருவதாக இஸ்ரேல் எச்சரித்திருந்தது. கடந்த சில வாரங்களாகவே ஈரானின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க உளவுத்துறை தகவல்களை சேகரித்து வந்தாலும், டிரம்ப்பை காலி செய்ய ஈரான் போட்ட சதித் திட்டம் தொடர்பான எச்சரிக்கை இஸ்ரேலிடமிருந்து வந்துள்ளது. நாம் இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அமெரிக்கா ஈரான் இடையேயான உறவு மேம்பட்டு வந்த நேரத்தில் இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை வந்தது. அதைத் தொடர்ந்தே அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
இஸ்ரேல் உளவு தகவல்
இதனால் இஸ்ரேல் உளவுத் தகவல் உண்மையானது தானா என்ற கேள்வி அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. ஈரானை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காகவே இஸ்ரேல் இதை செய்ததா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. டிரம்ப்பிற்கு இந்த தகவலை அனுப்பி, அதன் மூலம் ஈரான் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்குவதே இஸ்ரேலின் திட்டமாக இருந்தது என்ற கேள்வியும் எழுகிறது.
அமெரிக்கா ஈரான் உறவை பொறுத்தவரை, டிரம்ப் அதிபராக இருக்கும் காலகட்டத்தில் இரு நாட்டு உறவு மிக மோசமாகவே இருக்கிறது. டிரம்ப் முதலில் அதிபராக இருந்த காலகட்டத்தில்.. ஈரானின் புரட்சிகர காவல்படையின் முக்கிய தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவோம் என்று ஈரான் பல ஆண்டுகளாக வெளிப்படையாக எச்சரித்து வருகிறது.
அலி கமேனி
இதற்கு நடுவே பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்காவின் தாக்குதலில் அப்போது ஈரானின் உச்ச தலைவராக இருந்த அலி கமேனி கொல்லப்பட்டார். சமீபத்தில் தான் கமேனியின் இறுதி சடங்குகள் நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பலரும் பழிக்கு பழி வாங்கும் விதமாக டிரம்ப்பை கொல்ல வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்து வேறுபாடு
மறுபுறம் ஈரான் போர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு நிலவியது. ஈரானில் தற்போதுள்ள அரசை மொத்தமாக அழிக்கும் வரை ராணுவ நடவடிக்கையை தொடர வேண்டும் என்பதே நெதன்யாகுவின் விருப்பம். ஆனால் அமெரிக்க பணவீக்கம் மற்றும் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியை டிரம்ப் தேடினார். இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.
இந்த சூழலில் தான் நேற்று வியாழக்கிழமை டிரம்ப் மற்றும் நெதன்யாகு மீண்டும் தொலைப்பேசியில் பேசியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அப்போது இரு நாடுகளும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாகவும், வளைகுடா பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நெதன்யாகுவுக்கு டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.














Click it and Unblock the Notifications