என் பையன் இடத்தில் விஜய் இருக்கார்.. கரூர் நெரிசலில் உயிரிழந்த இளைஞரின் தாய்
கரூர்: முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நண்பகல் கரூர் செல்கிறார். கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக கூட்டத்தின், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கருணை அடிப்படையில் அரசு பணி ஆணையை வழங்கவுள்ளார். இது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. யாருக்கு எப்படியோ, எங்களுக்கு இந்த வேலை மிகவும் முக்கியம். இதை உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டோம் என்று கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இளைஞரின் அம்மா கண்ணீருடன் விஜய்க்கு நன்றி கூறியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரவிகிருஷ்ணா என்பவரின் தாய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் பையன் சிவில் இன்ஜினியராக இருந்தான். அப்பா இல்லை. கடந்த 2 வருடங்களாக தான் சொந்தமாக வேலை எடுத்து வந்தான். எங்கள் குடும்பத்தில் ரொம்ப கஷ்டம். அந்த கஷ்டத்தில் அவன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தான். இப்போதுதான் கொஞ்சம் மேலே வந்தோம். அதற்குள் இந்த பிரச்சனை வந்துவிட்டது. இவனும் என்னை விட்டு போய்விட்டான்.

உயிர் இருக்கும் வரை
ஊரே திருவிழாவாக இருக்கிறது. என் பையன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவன் இல்லாதது எங்களுக்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு. அதில் இருந்து இன்னும் நான் வெளியில் வர முடியவில்லை. பிழைப்புக்காக வேலைக்கு வந்து செல்கிறோம் அவ்வளவு தான். என் மகன் வெளியூரில் வேலை செய்கிறான் என்கிற நினைப்பில் இருக்கிறோம். அவன் இல்லை என்று நினைக்க முடியவில்லை. ஒருநாள் வருவான் என்கிற ஆசையில் இருக்கிறோம். எங்கள் குடும்பத்திற்கே இவன் ஒருவன் தான் பையன். எந்நேரமும் என் மகனின் நினைவில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவனுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்கள் இப்போதும் எனக்கு மகன்களாக உதவுகிறார்கள். இவர்களுக்கு எதற்கு அரசு வேலை கொடுக்கிறீர்கள் என நிறைய பேர் கேட்பதை டிவி, செல்போனில் பார்க்கிறேன். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. நான் வேலைக்கு செல்கிறேன். எனக்கு 5,000 ரூபாய் தான் சம்பளம். என்னை போன்றவளுக்கு இந்த வேலை மிகவும் முக்கியம். உயிர் இருக்கும் வரை இதை மறக்க மாட்டோம். என் பையன் இல்லாவிடினும் இன்றைக்கு அவர் எங்களை வந்து பார்க்கிறார்.
அண்ணாவாக தம்பியாக
என் மகளுக்கு அரசு வேலை தருகிறார்கள். நாங்கள் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கை சோறும் அவர் கொடுத்த பணம் தான். அவர்கள் கொடுக்கும் ரூ.5,000 பணத்தில் தான் வீட்டு வாடகை கொடுக்கிறேன். அரசு வேலை கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை சென்று பார்த்தபோதே, எங்களை பார்க்க கரூர் வருவேன் என விஜய் கூறினார். அப்போது உங்களை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்று மன்னிப்பு கேட்டார். எனக்கு அண்ணா, தம்பி, அப்பாவாக இருப்பேன் என்று கூறினார். இப்போது வரை உதவுகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications