பாக்கெட் பாக்கெட்டாக குட்கா.. கரூரில் விஜய்யை பார்க்க வந்தோரிடம் பறிமுதல் செய்த போலீசார்
கரூர்: கரூரில் தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மக்கள் சந்திப்பு நடக்கும் நிகழ்ச்சிக்கு வருவோரிடம் இருந்த குட்கா பொருட்கள், போலீசாரின் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அதன் பின், 285 நாட்களாக கரூர் செல்லாத நிலையில், முதல்வரான பின் முதல் முறையாக விஜய் இன்று கரூர் செல்கிறார்.

கரூர் மாவட்டம், வெண்ணெய்மலை அருகே, தனியார் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், 5,000 பேர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில், முதல்வர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். தொடர்ந்து, கரூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில், 'ரோடு ஷோ' செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5,000 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு QR Code உடன் கூடிய நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு நிகழ்வுக்காக அங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ செல்ல உள்ள அட்லஸ் கலையரங்கம் முதல் சுற்றுலா மாளிகை வரை கரூர்-கோவை சாலையில் 10 கி.மீ தூரத்திற்கு சாலை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் விஜய்யை பார்க்க காலையில் இருந்தே அட்லஸ் மைதானத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
முதலமைச்சர் விஜய், இன்று கரூர் செல்லும் நிலையில் மக்கள் சந்திப்பு நடக்க இருக்கும் இடத்தின் அருகே உள்ள 3 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யை பார்க்க வருவோரில் QR Code அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டும் வரிசையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆயுதங்கள், தீப்பற்றும் பொருட்கள், போதை பொருட்கள் உள்ளதா என சோதித்த பிறகே போலீசார் அவர்களை அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யை காண வருவோரிடம் இருந்த குட்கா பொருட்கள், போலீசாரின் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications