அடுத்தடுத்து மயங்கி பலியான 41 பேர்.. கரூர் கூட்ட நெரிசலில் அன்று என்ன நடந்தது? மறக்க முடியாத துயரம்
கரூர்: கடந்த ஆண்டு கரூர் வேலுச்சாமி பிரசாரத்தில் தேர்தல் பரப்புரைக்காக தவெக தலைவர் விஜய் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என்று மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் அந்த துயர சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
2025 செப்டம்பர் மாதம் 27 ம் தேதி.. தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு நாள். ஆம், அன்று நான் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என்று 41 பேர் துடிதுடித்த இறந்த துயரமான நாள்.

அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தவெக தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு அன்றைய தினம் பரப்புரைக்காக சென்றார். அவருக்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். விஜய் மதியம் 12 மணிக்கு வருவதாக தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் காலை முதலே கூட்டம் அதிகரித்தது.
ஆனால் விஜய் இரவு 7.40 மணிக்கு கரூர் வேலுச்சாமிபுரத்துக்கு சென்றார். இது ஏறக்குறைய 7 மணிநேரம் 40 நிமிடங்கள் தாமதமாகும். இதனால் அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை முதல் விஜய்யை பார்க்க வந்தவர்கள் இரவு வரை காத்திருந்தனர். மேலும் மாலை நேரத்தில் வேலை முடித்து வீடு திரும்பியோரும் விஜய்யை பார்க்க குவிந்தனர்.
இதனால் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மக்கள் கூடியிருந்தனர். மொத்தம் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 27 ஆயிரம் வரை திரண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மின்சாரமும் தடைப்பட்டது. விஜய் பேச பேச அவரை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்து அவரது வாகனத்தை நெருங்கி செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அங்கு தடுப்புகள், பாதுகாப்பு கம்பிகள் காரணமாக மக்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. மூச்சுத் திணறல் மற்றும் தள்ளுமுள்ளு அதிகரித்ததால் சிலர் அங்கிருந்த பந்தல் மற்றும் கூடாரத்தின் மேற்கூரையைப் பிய்த்துக்கொண்டு வெளியேறினர். இருப்பினும் பிற இடங்களில் அடுத்தடுத்து பொதுமக்கள் மயங்கி விழுந்தனர். பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று அனைத்து வயதினரும் மூச்சுவிட முடியாமல் திணறினர். அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இவர்களை சிலர் தங்களின் தோள்களில் தூக்கிகொண்டு கூட்டத்தை விட்டு புறப்பட்டனர். ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து பலரும் மயங்கி விழுந்ததால் பரப்புரை நிறுத்தப்பட்டது.
உடனடியாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மயங்கிவிழுந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சைகள் அளித்தும் 41 பேர் பலியாகினர். 8 பெண்கள், 10 குழந்தைகள் 13 ஆண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மரண ஓலத்தால் நிரம்பியது. சிலர் தங்களது நெருக்கமானவர்களை உடல்களை தேடி மருத்துவமனைகளுக்கு இடையே ஓடிய சம்பவம் கண்ணீரை வரவழைத்தது.
இருப்பினும் 100க்கும் அதிகமானவர்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். இந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி தற்போது சிபிஐ விசாரைண நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்த பிறகு விஜய் மீண்டும் கரூர் செல்லவில்லை. முதல்வரான பிறகு முதல் முறையாக அவர் இன்று கரூர் செல்ல உள்ளார். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசு பணிக்கான ஆணையை விஜய் இன்று வழங்க உள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது பற்றி சிபிஐ விசாரணை நடத்தப்படும் நிலையில் இந்த அரசு பணியாணை வழங்குவது விசாரணையை பாதிக்கும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபப்ட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications