விஜய் கரூர் மக்கள் சந்திப்பு.. 10 ஏக்கரில் பிரம்மாண்ட ஏற்பாடு.. டோக்கன் இருந்தால் மட்டுமே அனுமதி
கரூர்: முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நண்பகல் கரூர் செல்கிறார். கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக கூட்டத்தின், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கருணை அடிப்படையில் அரசு பணி ஆணையை வழங்கவுள்ளார். முன்னதாக தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக 10 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டோக்கன் இருப்போருக்கு மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி என்று பல கறார் நடவடிக்கைகளை தவெக எடுத்துள்ளது.
முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்புக்காக தவெக சார்பில் வெண்ணைமலை அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் இருந்தால் மட்டுமே அனுமதி என்று தவெக கூறியுள்ளது. கோட்டை வடிவில் நுழைவு அமைக்கப்பட்டுள்ளது.

விஜய் கரூர் மக்கள் சந்திப்பு
கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு காலை உணவு, தண்ணீர் பாட்டில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் நண்பகல் வருகை புரியவுள்ளார். காலை 8 மணி முதலே தொண்டர்கள், பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜய் நண்பகல் 12 மணிக்கு அரங்கத்திற்குள் செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் பேருந்து மீது நின்று தான் பேசினார். முதலமைச்சரான பிறகு திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்றபோதும், விஜய் பேருந்து மீது நின்று தான் பேசினார்.
கரூரிலும் விஜய் பேருந்து மீது நின்று தான் பேசவுள்ளார். இதற்காக நேற்றே பேருந்து கரூர் சென்றுவிட்டது. 5,000 பேர் அமரும் அரங்கு 16 பெட்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 330 பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன. விஜய் பேசும் பேருந்துக்கு முன்புறம் மகளிருக்கு என்று பிரத்யேகமாக நாற்காலி போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சுமார் 10,000 பேர் அமர்வதற்கான வசதி உள்ளது.
சிசிடிவியில் கண்காணிப்பு
ஆனால் பாதுகாப்பு கருதி சுமார் 5,000 பேர் மட்டுமே அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 10 ஏக்கர் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வளாகத்தை சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்ததும், விஜய் ரோடு ஷோ செய்து அரசு விருந்தினர் இல்லத்தில் மதிய உணவு உட்கொண்டு ஓய்வு எடுக்கிறார். ஓய்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் பேசவுள்ளார். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கவுள்ளார். மாலை தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ளவுள்ளார்.












Click it and Unblock the Notifications