ஐஏஎஸ்ஸா இருந்தாலும்.. மகனை அங்கன்வாடியில் சேர்த்த பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி! பின்னணி
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சரண்யா அறி தனது 2 வயது மகனை அங்கன்வாடியில் சேர்த்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். சமீபத்திய ஆய்வில் அங்கன்வாடி சிறப்பாக செயல்பட்டதில் ஈர்க்கப்பட்ட நிலையில் அவர் இப்படி செய்திருப்பது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பெரம்பலூர் கலெக்டராக இருப்பவர் சரண்யா அறி. இவர் கடந்த மாதம் 1ம் தேதி முதல் இந்த பொறுப்பில் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் எசனை ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் திடீரென்று சரண்யா அறி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கன்வாடி மையம் நன்றாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் தனது குழந்தையை அங்கன்வாடியில் சேர்ப்பதாக உறுதியளித்தார்.
அதன்படி சரண்யா அறி தனது 2வது மகனான 2வயது நிரம்பிய ஆத்விக்கை நொச்சியம் ஊராட்சிக்குட்பட்ட விளாமுத்தூரில் உள்ள அங்கன்வாடியில் சேர்த்தார். நேற்று காலையில் பணி நிமித்தமாக அந்த பகுதிக்கு சென்ற கலெக்டர் சரண்யா அறி தனது மகன் இருக்கும் அங்கன்வாடிக்கு சென்று குழந்தைகளை பார்த்தார். மகனை பார்த்ததோடு, மகனின் செயல்பாடு பற்றி அங்கன்வாடி ஊழியரிடம் கேட்டறிந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
தமிழகத்தில் அரசு அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு சேர்க்கை சரிந்து வருகிறது. இதனால் அரசு பணியில் உள்ளவர்கள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடி, அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இப்படி சேர்த்தால் அங்கன்வாடி, அரசு பள்ளிகள் உரிய முறையில் இயங்கும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை உள்ளது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில அரசு ஊழியர்கள் மட்டுமே தங்களின் குழந்தைகளை அரசு பள்ளி, அங்கன்வாடிகளில் சேர்க்கின்றனர்.
இப்போது பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி தனது மகனை அங்கன்வாடியில் சேர்த்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பிற அரசு பதவிகளில் உள்ள அதிகாரிகள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடி, அரசு பள்ளியில் சேர்க்கும்போது அங்கு உணவின் தரம் அதிகமாக இருக்கும். அதேபோல் பள்ளிகளில் முறையாக பாடங்கள் கற்பிக்கப்படும்.
தற்போது தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. இப்படி இருக்கும்போது அரசு அதிகாரிகளை போல் பலரும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications