இது லிஸ்டிலேயே இல்லையே.. ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் செயலால் முதல்வர் விஜய்க்கு புதிய சிக்கல்
தூத்துக்குடி: ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மானிய விலை பொருட்களை ஏற்றிச் சென்ற அரசு ஒப்பந்த லாரி நிறுத்தி ஆய்வு செய்துள்ளார் தவெக எம்எல்ஏ. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அன்னை ஜி.சரவணன் நேற்று முன்தினம் ரேஷன் கடைக்கு சென்ற லாரியை நிறுத்தி பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தார். அவரை திமுகவினர் கிண்டல் செய்வது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் அரசுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட லாரியின் டயர்களை ஆய்வு செய்திருக்கிறார் எம்எல்ஏ சரவணன் என்று பாராட்டவும் செய்திருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் கூறிய விஷயம் தான் முதல்வர் விஜய்க்கு சிக்கலாக முடியும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
பொதுவாக ஒரு சட்டமன்றத் தொகுதி எம்எல்எ என்பவர் தனது தொகுதியில் நடக்கும் அனைத்து அரசு திட்டப்பணிகளை கண்காணிக்கவும், அது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பவும் உரிமை உள்ளது. மேலும் அடிப்படை வசதிகள், மக்கள் கூறும் குறைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவும் உரிமை உள்ளது. அதேபோல் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று திட்டங்களை தீட்டி நிறைவேற்றவும் உரிமை உள்ளது.

அது மட்டுமின்றி தொகுதி வளர்ச்சி நிதி என்ற பெயரில் அவருக்கு வழங்கப்படும் நிதியை, மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை அடிப்படையில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட, பேருந்து நிழற்குடை அமைக்க, சாலை வசதி அமைக்க, சாக்கடை அமைத்து தர, நூலகம் அமைத்து தர, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர, சமூக நலக்கூடங்கள் கட்டித்தர என மக்களுக்கு அனைத்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்.
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் செய்தது போல், ரேஷன் கடைகளுக்கு செல்லும் பொருட்கள் தரமானதா என்று ஆய்வும் தாராளமாக செய்யலாம். அதேபோல் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினால், அங்கு ஆய்வும் செய்யலாம். அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்யலாம். இதேபோல் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் அரசு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசலாம்.
அதிகாரிகளிடம் பேசி, அவர்கள் கூறும் குறைகளை, முதல்வரின் கவனத்திற்கு எளிதாக கொண்டு செல்லலாம். எங்கோ ஒரு குக்கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லை என்றால், அதற்கும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல் நத்தம் புறப்போக்கில் குடியிருந்து பட்டா இல்லாமல் அவதிப்படும் ஏழைகள் குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் செய்த விஷயம் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏ சரவணன் நேற்று முன்தினம் ரேஷன் கடைக்கு சென்ற லாரியை நிறுத்தி பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தார். அப்போது டயர் வழுக்கும் நிலையில் உள்ளது. ஏதேனும் பிரச்சனையால் என்னாகும் என்று கேள்வி எழுப்பினார். பதிவு எண் குறித்தும் கேள்வி எழுப்பினார். அவர் கேள்வி எழுப்பியதை சிலர் கிண்டல் செய்திருந்தாலும், லாரி டயர் குறித்த விஷயம் உண்மை தான். ஏனெனில் அரசுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட லாரியின் டயர்களை ஆய்வு செய்தது சிறப்பு என்றாலும், இதேபோல் அரசு பேருந்துகளின் நிலையையும் எம்எல்ஏக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை நெட்டிசன்கள் வைக்க தொடங்கி உள்ளார்கள்.
இது பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், "அரசுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட லாரியின் டயர்களை ஆய்வு செய்திருக்கிறார் எம்எல்ஏ சரவணன். சிறப்பு! ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள் ஓடும் அரசுப் பேருந்துகளின் நிலை, அதன் டயர் கண்டிஷன்களை ஆய்வுசெய்யும் பணிகளை எம்.எல்.ஏ உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஏரல் டூ ஸ்ரீவைகுண்டம், ஏரல் டூ தூத்துக்குடி செல்லும் நகரப் பேருந்துகள் என்ன லட்சணத்தில் ஓடுகிறது என்பதை அறிந்துகொண்டு அரசு அதிகாரிகளை எம்.எல்.ஏ கண்டிக்க வேண்டும். அரசின் உடைமைகளை ஏற்றிச் செல்லும் லாரி கண்டிஷன் குறித்து வருந்தும் அமைச்சர் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் அவல நிலையை கண்டு கொதித்துப் போயிருக்க வேண்டாமா? ஆகவே, அரசுப் பேருந்துகளை நிறுத்தி டயர் கண்டிஷன் குறித்து ஆய்வு செய்யும் ரீல்ஸுகளை தொகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்! " இவ்வாறு கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications