சென்னைவாசிகளுக்கு குஷி நியூஸ்.. பிரபல மெட்ரோ ரயில் நிலையத்தில் திறக்கப்படும் பெரிய லூலூ மார்க்கெட்!
சென்னை: சென்னை மெட்ரோக்களில் சிறிய அளவில் மால்களை அறிமுகம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக லூலூ ஹைப்பர் மார்க்கெட் சென்னை மெட்ரோக்களில் திறக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களை வெறும் போக்குவரத்துக்கான இடமாக மட்டும் பார்க்காமல், மக்கள் எளிதாக தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்லும் ஒரு மினி வணிக மையமாக மாற்றும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் பொதுப் போக்குவரத்தின் மிக முக்கிய அங்கமாக விளங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனது பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கூடுதல் வருவாயை ஈட்டவும் பல்வேறு அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையின் முக்கிய மெட்ரோ நிலையங்களில் ஒன்றான ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட லூலூ ஹைப்பர் மார்க்கெட் விரைவில் திறக்கப்பட உள்ளது.
1 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட வணிக வளாகம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான கிரேஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து லூலூ குரூப் இந்த பிரம்மாண்ட ஹைப்பர் மார்க்கெட்டை அமைத்து வருகிறது. ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் அடித்தளப் பகுதியில் சுமார் 1.12 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த வணிக வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிற மால்களுக்கு இணையாக, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், பேக்கரி உணவுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமின்றி, நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஆடம்பர ஃபேஷன் ஆடைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிரீமியம் ரக பொருட்கள் என அனைத்தும் பொதுமக்களுக்குக் கிடைக்க உள்ளன.
திரு.வி.க பூங்கா
ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள திரு.வி.க பூங்கா ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. குழந்தைகள் விளையாடும் இடம், நடைபயிற்சி பாதை, இறகுப்பந்து மைதானம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் போன்ற பல்வேறு வசதிகளுடன் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது இதன் தரைப்பகுதியில் அமையவிருக்கும் லூலூ ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில், வெறும் ஷாப்பிங் மட்டுமல்லாமல், குழந்தைகள் விளையாடுவதற்கான ஃபன் சிட்டி அமைக்கப்பட உள்ளது.
பிரசித்தி பெற்ற உணவகங்கள் மற்றும் 600 பேர் அமரக்கூடிய ஒரு மினிப்ளெக்ஸ் திரையரங்கமும் வரவுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஷெனாய் நகர் மற்றும் அண்ணா நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இது பெரிய அளவில் பலன் அளிக்கும்.
மெட்ரோ பயணிகளுக்குக் கிடைக்கும் வசதிகள்
மெட்ரோவில் பயணிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். வேலை முடிந்து வீடு திரும்பும் பயணிகள், தனியாக கடைகளுக்கோ அல்லது மால்களுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.
அவர்கள் தங்களின் மெட்ரோ பயணத்தின் போதே, இந்த லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் நுழைந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை எளிதாக வாங்கிக் கொண்டு, மீண்டும் மெட்ரோ ரயிலில் ஏறி தங்களின் இல்லங்களை அடையலாம்.
பயணிகளின் வசதிக்காக, அவர்கள் வாங்கும் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தும் ஷாப்பிங் கார்ட்களை மெட்ரோ ரயில் பிளாட்பார்ம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலையத்தில் 400க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான பிரம்மாண்ட வாகன நிறுத்த வசதியும் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications