திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. ஜான் ஆரோக்கியசாமியை வேட்பாளராக களமிறக்கும் விஜய்!
திருச்சி: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் இந்த இடைத்தேர்தலிலும் வெற்றிபெற காய் நகர்த்தி வருகிறது.

விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில், திருச்சி கிழக்கை ராஜினாமா செய்த நிலையில், அங்கே இடைத்தேர்தல் வருகிறது. ஏற்கனவே காலியாக உள்ள 6 தொகுதிகளுடன் சேர்த்து இங்கே இடைத்தேர்தல் வருகிறது.
இந்நிலையில், தவெகவின் தேர்தல் வெற்றிக்குத் திரைமறைவில் இருந்து மிக முக்கிய வியூகங்களை வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியை இந்தத் தேர்தலில் நேரடியாக வேட்பாளராகக் களமிறக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக மற்றும் கோட்டை வட்டாரங்களிலிருந்து அதிரடியான தகவல்கள் கசிந்துள்ளன.
ஜான் ஆரோக்கியசாமியின் நேரடி அரசியல் என்ட்ரி?
சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் வெற்றிக்கான திட்டங்களை வடிவமைத்ததில் ஜான் ஆரோக்கியசாமிக்கு மிக முக்கியப் பங்குண்டு.
கட்சியின் கொள்கை, சமூக ஊடக மேலாண்மை, இன்ஸ்ட்டாகிராமை வைத்து அலையை உருவாக்கியது. 2 வருடங்களில் கட்சியை தமிழ்நாடு முழுக்க கொண்டு சென்றது, தொகுதி வாரியான வேட்பாளர் தேர்வு என அனைத்திலும் இவரது கை ஓங்கியிருந்தது. சமீபகாலமாக, முதல்வர் விஜய்யின் மிக நெருக்கமான அதிகார மையமாக ஜான் ஆரோக்கியசாமி பார்க்கப்படுகிறார்.
அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சரவைக் கூட்டங்களிலும் கூட இவரது ஆலோசனைகள் முக்கியத்துவம் பெற்று வரும் வேளையில், இவரை நேரடியாக மக்கள் பிரதிநிதியாக மாற்றுவது தான் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்குப் பலம் சேர்க்கும் என முதல்வர் விஜய் கருதுவதாகக் கூறப்படுகிறது.
திரைமறைவில் காய் நகர்த்திய ஒரு மாஸ்டர்மைண்ட் நேரடியாகத் தேர்தல் களத்தில் குதித்தால், அது கட்சிக்கும், ஆட்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று விஜய் நம்புவதாக தோன்றுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதி ஏன் முக்கியமானது?
திருச்சி கிழக்கு தொகுதி என்பது மத்திய தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் மையமாகும். பல்வேறு சமூக அமைப்புகளும், கலவையான வாக்காளர்களும் நிறைந்த இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது எளிதல்ல. அதிலும் விஜய் தொகுதி என்பதால் வெல்வது எளிது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் இந்தத் தொகுதியைத் தங்கள் வசம் இழுக்க இப்போதே ரகசிய வேலைகளைத் தொடங்கிவிட்டன. இத்தகைய சவால் நிறைந்த ஒரு தொகுதியில், வெறும் அரசியல் முகம் கொண்ட ஒருவரை நிறுத்துவதை விட, தேர்தல் அரசியலின் அக்கு வேர் ஆணிவேரை நன்கு அறிந்த ஜான் ஆரோக்கியசாமியை நிறுத்தினால் எளிதாகக் கோட்டையைப் பிடிக்கலாம் என தவெக திட்டமிடுகிறது.
அதோடு அவர் வென்றால் அமைச்சர் பதவியும் கண்டிப்பாக வழங்கப்படும். தொழில்துறை உள்ளிட்ட துறை இவருக்கு வழங்கப்படும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
சமீபத்தில், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரு தனியார் நபர்கள் தவெகவின் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பதாகக் கூறி திமுக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் தமிழக ஆளுநரிடம் மனு அளித்துப் பரபரப்பைக் கிளப்பின. தவெக அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தைப் பெரிய அளவில் கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் முயன்றன.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜான் ஆரோக்கியசாமியை முறைப்படி தேர்தல் களத்தில் நிறுத்தி, சட்டமன்ற உறுப்பினராக ஆக்கிவிட்டால், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என முதல்வர் விஜய் இந்த அதிரடி முடிவை நோக்கி நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications