"என்னை கொல்ல சதி.." உடைத்து பேசிய அதிபர் டிரம்ப்.. ஈரான் போடும் திட்டம் இதுதான்.. பரபரப்பு
அங்காரா: வளைகுடாவில் நிலவி வந்த அமைதி முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகள் நிலைமை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இதற்கிடையே ஈரான் தன்னை கொலை செய்ய சதி தீட்டக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதேநேரம் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வளைகுடாவில் நடக்கும் மாற்றங்களை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அங்கு அமெரிக்கா ஈரான் இடையே ஏற்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டது. இரு தரப்பும் மாறி மாறி தாக்க தொடங்கிவிட்டதால் பதற்றம் அதிகரித்துவிட்டது. ஏற்கனவே இதனால் கச்சா எண்ணெய் விலையும் கூட எகிற ஆரம்பித்துவிட்டது.

நான் தான் இலக்கு
இதற்கிடையே நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகத் துருக்கியின் அங்காராவில் சென்றுள்ள டிரம்ப், அங்கிருந்தபடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஈரானை தாக்க அமெரிக்கா ரெடியாக இருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், தன்னை கொலை செய்ய ஈரான் முயலும் என்றும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், "ஈரானின் பல தலைவர்கள் தற்போது உயிருடன் இல்லை. விரைவில் மேலும் சிலர் இல்லாமல் போகலாம். நானும் கூட அவர்களின் டார்கெட்டாக மாறலாம். சொல்லப்போனால் நான் தான் அவர்களின் முதல் இலக்கு. கடந்த 47 ஆண்டுகளாக அவர்கள் இப்படித்தான் செயல்பட்டு வருகின்றனர்" என்று கூறினார்.
ஈரானின் முந்தைய தலைமைகள் மிகவும் விரோத மனப்பான்மையுடன் செயல்பட்டதாகக் கூறிய டிரம்ப், தற்போதைய தலைமை சற்று யோசித்து நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், ஈரான் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் முடிவு காணவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் ஓவர்
இது குறித்து அவர் மேலும், "ஈரானுடன் மேற்கொண்டிருந்த அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இனியும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவொரு பயனும் இல்லை. ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப் போகிறோம். அவர்கள் ஒப்பந்தத்தைத் தினமும் மீறி வருகின்றனர்" என்று எச்சரிக்கை விடுத்தார். போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் அமலில் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "என்னைப் பொறுத்தவரை அந்த போர் நிறுத்தம் முடிந்துவிட்டது" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மாறி மாறி தாக்குதல்
டிரம்ப் இந்த கருத்தைச் சொன்ன கொஞ்ச நேரத்திலேயே.. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் மற்றும் புஷெஹர் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில், ஈரான் விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 8 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "அமெரிக்கா ஒருதலைபட்சமாகத் தாக்குதல் நடத்தி ஒப்பந்த விதிமுறைகளை மீறியுள்ளது. இது ஆக்கிரமிப்பு நடவடிக்கை" என்று குற்றம்சாட்டினார்.
போர் நிறுத்த ஒப்பந்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு இருந்தது. அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து மெல்ல சீராக தொடங்கியது. அதேநேரம் ஹாரமுஸில் தான் அனுமதித்த வழித்தடத்திலேயே கப்பல்கள் பயணிக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியது. அதுபோல பின்பற்றாத கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலையும் நடத்தியது. 24 மணி நேரத்திற்குள் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதுவே அமெரிக்காவை ஆத்திரப்படுத்தியது.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. டிரம்பின் எச்சரிக்கை மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது!














Click it and Unblock the Notifications