பல்லாவரம் - குன்றத்தூர் சாலை.. ஆக்கிரமிப்புகளால் மாறாத காட்சி.. பொதுமக்கள் கோரிக்கை
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளை இணைக்கும் பல்லாவரம்-குன்றத்தூர் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி 7 மாதங்கள் ஆகியும், இன்னும் ஒரு சில இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பங்களை அகற்றாமலும் இருக்கிறது. இதனால் பணிகளில் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
பல்லாவரம்-குன்றத்தூர் சாலை வழியாகவே பலர் சென்னை வெளிவட்டச்சாலை செல்ல பயன்படுத்துகிறார்கள். அதேபோல் அனகாபுத்தூர், குன்றத்தூர், போரூர், பூந்தமல்லி, ஆவடி செல்வதற்கு இந்த சாலையை பலர் தினந்தோறும் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் குன்றத்தூரில் இருந்து சென்னை விமான நிலையம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த சாலை தான் பிரதான சாலையாகும். இந்த சாலை மிக குறுகலாக உள்ளது. இதனால் எப்போதுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்கும் விதமாக கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்லாவரம் - குன்றத்தூர் சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு குன்றத்தூர் அடுத்த கரைமாநகர் பகுதியில் இருந்து குன்றத்தூர் வரை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு சாலையோரத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. மேலும் கரைமாநகர் பகுதியில் புதிய பாலம் அமைத்து சாலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி அந்த பகுதியில் இருந்த பழைய தரைப்பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
ஆனால் பல்லவாரம் குன்றத்தூர் சாலை பணிகளை பொறுத்தவரை 7 மாதங்கள் ஆகியும், இன்னும் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. அதேபோல் மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பங்களை அகற்றாமல் உள்ளனர். இதனால் சாலை விரிவாக்க பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள். அதுவும் பணிகள் தொய்வடைய காரணமாக உள்ளது.
இதுஒருபுறம் எனில், ஆங்காங்கே சாலை விரிவாக்க பணிகளுக்காக பள்ளம் தோண்டி ஜல்லிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலர் வாகனங்களை நிரந்தரமாக சாலையோரமே நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் காலை மற்றும் மாலையில் செல்லும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகவே செல்லும் வகையில் ஒருவழிப்பாதை போல் சாலை சுருங்கியே இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்த பகுதியில் மின் விளக்குகள் போதிய அளவில் இல்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் என்ற அச்சமும் வாகன ஓட்டிகளுக்கு உள்ளது. எனவே விரைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை முடிக்க வேண்டும் என்று பல்லாவரம் குன்றத்தூர் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.














Click it and Unblock the Notifications