தியேட்டாரா? மருத்துவமனையா? இப்படியா பண்ணுவாங்க! விஜய்யை பார்த்ததும் உற்சாகத்தில் கத்திய பொதுமக்கள்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று சென்னை எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் விஜய் திடீர் விசிட்டாக மருத்துவமனைக்கு சென்றாலும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கு நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்கள் உற்சாகம் அடைந்து விஜய்யை சூழந்து கொண்டனர். விஜய்யை பார்த்த ஆர்வமிகுதியில் சத்தமும் போட்டதால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதேநேரத்தில் மருத்துவமனையில் இதுபோன்ற சத்தங்கள் எழுப்புவது நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி மருத்துவ சட்டப்படி குற்றம் என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

குழந்தைகளை கொஞ்சிய முதல்வர் விஜய்
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மிகவும் பிரபலமானதாகும். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலையில், தமிழக முதல்வர் விஜய் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த முதல்வர் விஜய், நேராக பிரசவ அறை, பச்சிளம் குழந்தைகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மருந்து, மாத்திரைகள் தடையின்றி கிடைக்கிறதா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்றும் அவர் விசாரித்தார். ஆய்வின் போது, அங்கு தொட்டிலில் இருந்த பிஞ்சு குழந்தைகளை விஜய் தூக்கி வைத்து, பாசத்துடன் கொஞ்சினார்.
உற்சாகத்தில் கத்தினர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த எழும்பூர் மருத்துவமனையில் ஊழியர்கள் சிலர் லஞ்சம் வாங்குவதாகவும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக இல்லை என்றும் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர் நேரடியாக களத்தில் இறங்கி இந்த அதிரடி சோதனையை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆய்வை முடித்துக் கொண்ட விஜய், மருத்துவமனை இயக்குனர் டாக்டர் குப்புலெட்சுமியை நேரில் அழைத்து தீவிர ஆலோசனை நடத்தினார். "ஏழை எளிய நோயாளிகள் மற்றும் தாய்மார்கள் கூறும் குறைகளை அலட்சியப்படுத்தக் கூடாது, அவற்றை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க விஜய்யை பார்த்த உற்சாகத்தில் மருத்துவமனைக்கு வந்திருந்த உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ரசிகர்கள் சிலர் உற்சாகத்தில் சத்தம் போட்டனர்.
வேறு யாராக இருந்தால் ஒரு லட்சம் அபராதம்
பச்சிளங்குழந்தைகளுடன் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த தாய்மார்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் இது அதிர்ச்சியை கொடுத்தது. எதோ தியேட்டரில் விசில் அடிப்பது போல மருத்துவமனையில் சத்தம் போடுவதா? என பெற்றோர்கள் முனுமுனுத்துக்கொண்டதையும் காண முடிந்தது. சமூக வலைத்தளங்களில், இந்த விவகாரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. நெட்டிசன் ஒருவர் கூறுகையில், மருத்துவமனை அருகில் அதாவது 100 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் விழாக்கள், சத்தம் வர கூடிய எந்த நிகழ்ச்சி, 50 டெசிபல் தாண்டும் எதையும் நடத்தப்பட கூடாது என சட்டமே உள்ளது.
ஆனால் இது குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குள்ளேயே நடந்துள்ளது. இதையே வேறு ஒரு நடிகர் செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஒரு லட்சம் அபராதம் அல்லது அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே வழங்கலாம் என்கிறது சட்டம். பொறுப்புடன் செயல்படுங்கள் முதல்வர் அவர்களே.. என்று பதிவிட்டுள்ள்னார்.
முதல்வர் ஆய்வுக்கு செல்வது தவறு என்று சொல்ல முடியாது. அது வரவேற்கத்தக்க செயல்தான். ஆனால் இதுபோன்று நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியதும் அவரது பொறுப்புதான் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications