காரைக்குடியில் தவறான சிகிச்சையால் சிறுவனின் ஆணுறுப்பு அகற்றம்! அலட்சியமாக பேசிய மருத்துவர்!
சிவகங்கை: காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் அவனது ஆணுறுப்பு அழுகியதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மருத்துவர்கள் அளித்த பதிலால் அச்சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் போது, பேட்டி தொடங்குவதற்கு முன் ஆளுக்கு 500 ரூபாய் கவரில் போட்டு கொடுத்துடுங்க.. இதை வச்சிதான் இந்த மேட்டரை திசை திருப்ப போறோம் என்று பேசிக்கொண்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தவறான சிகிச்சையால்
காரைக்குடி பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 10 வயது மகனுக்கு ஆணுறுப்பில் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் காரைக்குடி வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த சிறுவனை பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அந்த மருத்துவமனையில் வேறு ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த சிறப்பு டாக்டர் ஒருவர் அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு நிலைமை மோசமானது.
அதாவது அந்த சிறுவனின் ஆணுறுப்பு அழுகி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன மருத்துவர்கள் உடனடியாக அந்த சிறுவனை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அன்க்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிறுவனின் ஆணுறுப்பு முற்றிலும் அழுகியதாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதைக் கேட்டு சிறுவனின் பெற்றோர் துடிதுடித்து போயினர்.
உறவினர்கள் போராட்டம்
மேலும் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் என் மகனுக்கு இப்படி ஆனதாக பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறுவனுக்கு தவறான சிகிச்சை கொடுத்த 2 மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காரைக்குடி ஏ.எஸ்.பி-யிடம் புகார் அளித்தனர்.
நேற்று அந்த சிறுவனனின் பெற்றோர்கள், உறவினர்கள், பல்வேறு கட்சியினர், நகைக்கடை சங்கத்தினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் அந்த மருத்துவமனை முன்பு சிறுவனுக்கு தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.
இதை வச்சிதான் திசை திருப்ப போறோம்
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், பேட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆளுக்கு ரூ.500 கவரில் போட்டு கொடுத்துருங்க.. இதை வச்சிதான் நாம இந்த மேட்டரை திசை திருப்ப போறோம் என்று பேசிக்கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications