ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. ஒரு மாதம் கூட தாங்கலயே! நடந்தது என்ன? பின்னணி
வாஷிங்டன்: கடந்த பிப்ரவரி கடைசியில் ஈரான் அமெரிக்கா இடையே போர் தொடங்கியது. 4 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தம் போட்டு முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை ஆனால் அதற்குள் தற்போது ஈரான் அமெரிக்கா இடையே மீண்டும் போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அப்படி இந்த ஒரு மாதத்திற்குள் என்ன தான் நடந்தது என்பது? இதற்கான முழு காரணம் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மட்டுமின்றி முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் இதற்கு பதிலடித் தாக்குதலை தொடங்கியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்களைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு ஈரானும் தாக்குதலை தொடுத்தது.

மீண்டும் பதற்றம்
ஈரானும் அமெரிக்காவும் தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்ததால், மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவி வந்தது. இந்த சூழலில் தான் கடந்த மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் விரைவில் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து பதற்றம் தனியும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறே ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு சர்வதே அளவில் கப்பல் போக்குவரது சீரானது.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை கொஞ்ச நாளிலேயே மீண்டும் போர் வெடிக்கும் சூழல் உருவாகிவிட்டது. பாகிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்துடன் ஈரான் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து இருந்தன. ஆனால் பேச்சுவார்த்தைக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தாக்குதல் நடத்தியதால் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் இன்று இரவே ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என சொல்லியிருப்பது மீண்டும் போர் வெடிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கான முழு காரணம் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
ஜூன் 17-ல் போர் நிறுத்த ஒப்பந்தம்
கடந்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி அன்று அமெரிக்காவும் - ஈரானும் எம்.ஒ.யு எனப்படும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நிரந்தர அமைதி ஒப்பந்தம் இல்லை என்றாலும், இரு தரப்பும் ஒருவரை ஒருவர் நேரடியாக தாக்கக்கூடாது என்பதற்கான ஒரு தற்காலிக ஒப்பந்தமாக இது செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் இருநாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்காமல் இருந்தன.
எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
ஆனால் நேற்று முன் தினம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற வணிக எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்றும் அதே கடல் பகுதியில் மேலும் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இந்த தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இதனை ஈரான் தான் செய்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் அமைதி ஒப்பந்தத்தை மீறி ஈரான் இந்த செயலை செய்திருப்பதாகவும் தெரிவித்தது.
ஈரானை தாக்கிய அமெரிக்கா
இதற்கு உடனடியாக பதில் கொடுக்கும் விதமாக அமெரிக்க ராணுவம், ஈரானில் 80-க்கும் அதிகமான இடங்களில் வான்வழி தாக்குதலை நடத்தியது. சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காவும், போர் நிறுத்த புரிந்துணர்வை மீறியதற்காகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க விளக்கம் அளித்தது. அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரானும் உடனடியாக பதில் தாக்குதலை கொடுத்தது.
அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையானது, பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் மீண்டும் வளைகுடா நாடுகளுக்கும் இந்த தாக்குதல் பரவியது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. உலக தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தன. முன்னாள் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே கூறுகையில், "அமெரிக்காவின் தாக்குதல் இப்போது அவசியமானது தான்" என்று தெரிவித்தார்.
போர் நிறுத்தம் முடிந்துவிட்டதாக டிரம்ப் அறிவிப்பு
ஈரான் பதிலடியால் மேலும் கோபமடைந்த டிரம்ப், போர் நிறுத்தம் முடிந்துவிட்டதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இன்று இரவே ஈரானை கடுமையாக தாக்குவோம் என்று தெரிவித்தார். துருக்கியில் நேட்டோ உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:- "ஈரான் மீது முந்தைய இரவில் கடுமையான தாக்குதல் நடத்தினோம்.. இன்று இரவு மீண்டும், மிக மிக கடினமான தாக்குதலை நடத்தப் போகிறோம். ஈரானுக்கு நான் எச்சரிக்கையை விடுக்கிறேன்.. இன்று இரவு கடுமையாக தாக்கப் போகிறோம். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அணு ஆயுதம் கிடைத்தால் அதை பயன்படுத்த தயங்க மாட்டார்கள்" என்று கூறினார்.
உலக அளவில் அதிகரிக்கும் பதற்றம்
ராணுவ நடவடிக்கை மட்டுமில்லாமல், ஈரானுக்கான எண்ணெய் விற்பனை தொடர்பான சலுகையையும் ரத்து செய்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியிலும் ஈரானை வலிமை இழக்க செய்ய அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஈரானில் நடைபெற்று வருகிறது. இதன் ஐந்தாவது நாள் நிகழ்வு, ஈராக்கின் நஜஃப் நகரில் நடந்து வரும் சூழலில் டிரம்பின் இந்த தாக்குதல் அறிவிப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே அலி கமேனி ஊர்வலத்தின் போது ஓரே ஒரு தாக்குதல் தான் மொத்தாக முடிச்சிவிட்ரலாம் என டிரம்ப் கிண்டலாக பெசியிருந்தார்.
ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் உச்சம் தொட்டுள்ளது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கச்சா எண்னெய் விலையும் உடனடியாக 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து போர் பதற்றம் நீடித்தால், அதன் தாக்கம் வளைகுடா பிராந்தியத்தை மட்டுமின்றி உலக பொருளாதாரம், குறிப்பாக கச்சா எண்ணெய் விலை மற்றும் சர்வதேச வர்த்தகத்திலும் பெரிய அளவில் எதிரொலிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















Click it and Unblock the Notifications