இந்தியர்களுக்கு நிம்மதி! டிரம்பிற்கு சம்மட்டி அடி.. பிறப்புரிமை குடியுரிமையை பறிக்க முடியாது!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாக அந்நாட்டின் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யும் பிறப்புரிமை குடியுரிமை சட்டத்தை அந்நாட்டு அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் டிரம்பின் முடிவு செல்லாது என அறிவித்துள்ளது. இது அங்கு வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு அதிபராகப் பதவியேற்ற உடனேயே பிறப்புரிமை குடியுரிமை சட்டத்தை டிரம்ப் அதிரடியாக ரத்து செய்திருந்தார். அதாவது அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் அல்லது ஹெச்-1 பி உள்ளிட்ட தற்காலிக விசாக்களில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கு அமெரிக்காவில் பிறந்தாலும் தானாகவே குடியுரிமை கிடைக்காது என்பதே இதன் சாரம்சம்.

டிரம்ப் உத்தரவு
பெற்றோரில் குறைந்தபட்சம் ஒருவர் அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது நிரந்தர வசிப்பிட உரிமம் பெற்றவராகவோ இருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று இந்த உத்தரவு கட்டுப்பாடுகளை விதித்தது. இது அங்கு வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பலருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதையடுத்து டிரம்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், டிரம்பின் உத்தரவு செல்லாது என்று அறிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு, அமெரிக்காவின் குடிவரவுக் கொள்கை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் 14வது அரசியலமைப்புத் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகள் உள்ள நிலையில், அதில் 6 நீதிபதிகள் டிரம்பின் உத்தரவு செல்லாது என அறிவித்தனர். 3 நீதிபதிகள் டிரம்பிற்கு சாதகமாக தீர்ப்பளித்தனர். இருப்பினும், பெரும்பான்மை அடிப்படையில் டிரம்பின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தற்காலிக விசாக்களில் தங்கியிருப்போர் மற்றும் அல்லது சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களின் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே டிரம்ப் தரப்பின் வாதமாக இருக்கிறது.
டிரம்ப் வாதம்
தற்போதைய குடியுரிமை கொள்கையைப் பலரும் தவறாக பயன்படுத்தி வருவதாக டிரம்ப் காலமாக வாதிட்டு வருகிறார். ஆனால், டிரம்ப் அரசு இதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது டிரம்ப் சார்பில் ஆஜரான அமெரிக்க சொலிசிட்டர் ஜெனரல் டி. ஜான் சாவர், "இந்த சட்டம் ஆரம்பத்தில் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது. மேலும், தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்காகவே வெளிநாட்டினர் சிலர் சுற்றுலா என சொல்லி அமெரிக்காவுக்கு வந்து குடியுரிமை பெறுகிறார்கள். இந்த போக்கு அதிகரித்து வருகிறது" என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதிகள், "எத்தனை பேர் இதுபோல குழந்தை பிறக்கும்போது, அமெரிக்காவுக்கு வந்து குடியுரிமை பெற்றுள்ளனர்" என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும், இது தொடர்பான துல்லியமான டேட்டா தன்னிடம் இல்லை என்று டிரம்ப் தரப்பு கூறியது. இதையடுத்து டிரம்ப் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து நீதிமன்றம் அதை ரத்து செய்தது.
அமெரிக்கச் சட்டம் சொல்வது என்ன
இந்த வழக்கு அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தம் தொடர்பானதாகும். அமெரிக்காவில் பிறக்கும் எந்தவொரு நபருக்கும் தானாக அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்பதை இந்த விதி தெளிவாகக் கூறுகிறது. கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக.. வெளிநாட்டு தூதர்களின் குழந்தைகளைத் தவிர்த்து, அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் பெற்றோரின் சட்டவிரோதமாக நுழைந்திருந்தாலும் சரி, தற்காலிக விசாவில் இருந்தாலும் சரி, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது.
அமெரிக்காவில் இந்தியர்கள் பலரும் ஹெச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு டிரம்பின் உத்தரவு பெரும் அதிர்ச்சி கொடுப்பதாகவே இருந்தது. இந்தச் சூழலில் தான் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்திருக்கிறது.














Click it and Unblock the Notifications