என் கைகள் கட்டப்பட்டிருக்கு.. வைபவ் சூர்யவன்ஷி நாளை களமிறங்குவாரா? ஸ்ரேயாஸ் ஐயர் பதில்!
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்டின் 15 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷியின் சர்வதேச அறிமுகம் எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடையே விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஓப்பனாக பேசி இருக்கிறார்.

நாளை இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயரிடம், "நாளை வைபவ் விளையாடுவாரா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர், இந்த விஷயத்தில் என்னுடைய கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரம் இந்திய அணிக்குள் மிகவும் ரகசியமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பேச முடியாது.
எங்கள் வியூகங்களை வெளியே சொல்லி, எதிரணிக்கு முன்கூட்டியே சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த வீரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும் முக்கியம். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். தனி நபரின் செயல்பாட்டை மட்டுமே பார்க்க முடியாது.
வைபவ் சூர்யவன்ஷி ஒரு அசாத்திய திறமைசாலி. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவருக்கு எப்போது இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது நிச்சயம் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார். இதனால் மீண்டும் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணியே தொடக்கம் கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, மிக இளம் வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வரலாற்று சாதனை படைக்கும் விளிம்பில் நிற்கும் வைபவ் சூர்யவன்ஷிக்காக மொத்த இந்திய ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் தொடக்க வீரர்கள் சொதப்பினால், அவருக்கான கதவுகள் உடனடியாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications