“திமுகவின் எதிர்ப்பால் ஒரு வார்த்தையை நீக்கிய தவெக அரசு”.. செந்தில் பாலாஜி வழக்கு குறித்து NR இளங்கோ
சென்னை: "திமுகவின் எதிர்ப்பால் ஒரு வார்த்தையை நீக்கியுள்ளது தவெக அரசு" என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் முன்ஜாமின் வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி அளித்துள்ளார்.
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு, காவல்துறை விசாரணை அதிகாரி முன் தினமும் இரு வேளையும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்.ஆர்.இளங்கோ பேட்டி
இந்த உத்தரவு தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "இன்று சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியிருக்கிறார்கள். நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியிருக்கிறார்கள். இந்த வழக்கு என்னவென்றால் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா தன்னிடம் ஒரு நபர், 'நீங்கள் சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது ஒரு நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரும்போது அதற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும், உங்க கொறடா என்ன சொன்னாலும் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும், அப்படி வாக்களித்தால் உங்களுக்கு நாங்கள் 35 கோடி ரூபாய் தருகிறோம்' அப்படின்னு சொல்லி ஒரு புகார் கொடுத்திருந்தாங்க.
நாங்க அதை வாதாடும் போது நாங்க என்ன சொன்னோம் என்றால், "26-ஆம் தேதி ஜூன் மாதம் ஏறக்குறைய இரவு 10 மணிக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்ததாக எஃப்.ஐ.ஆர்-ல குறிப்பிட்டிருந்தாங்க. ஆனா 29-ஆம் தேதி வரைக்கும் அந்த சட்டமன்ற உறுப்பினர் அது குறித்து எந்த புகாரையும் யாருகிட்டயும் தரல. இந்த இரண்டு நாட்கள்ல அவர் அந்த புகாரில் என்னென்ன சட்டம், அதுக்குரிய வார்த்தைகள் எது எதெல்லாம் வரணுமோ, அதெல்லாம் யோசிச்சு வச்சு அந்த ரெண்டு நாள்ல புகாரை உருவாக்கி கொடுத்திருக்காங்க.
நேரடி சாட்சியங்கள் இல்லை
அவர்கிட்ட பேசுனதாக சொல்லப்படுகின்ற முதலாம் எதிரி, திருநாவுக்கரசு என்ன சொன்னார் என்றால், 'நான் எம்.எல்.ஏ-கிட்ட பேசுனது உண்மைதான். ஆனா நாங்க அரசியல் ரீதியாக தேர்தலை குறித்தும் அதனுடைய முடிவுகளை குறித்தும்... நான் ஒரு செஃபாலஜிஸ்ட், நான் தேர்தல் முடிவுகளை குறித்து ஆராய்ச்சி செய்கிறவன், அதுக்காக நான் பேசினேன்' அப்படின்னு சொல்லிருந்தார்.
நாங்க எடுத்து சொன்னது என்னன்னா, செந்தில் பாலாஜியையோ இல்ல அவங்க தம்பி அசோக் குமாரையோ குற்றம்சாட்ட நேரடியான சாட்சியங்கள் எதுவும் இல்லை. எல்லாமே காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்ட, நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாத, அனுமதிக்கப்படக்கூடாத ஒரு ஒப்புதல் வாக்குமூலம். அதுல தான் இவங்க பேர் எல்லாம் எழுதி எடுத்துட்டு வந்திருக்காங்க.
ஒரே நாளில் ஈரோட்டில்
அரசு தரப்புல என்ன சொன்னாங்கன்னா, 'திருநாவுக்கரசுவும் செந்தில் பாலாஜியும் ஒரே நாள்ல ஈரோட்டுல இருந்திருக்காங்க. ஒரு இடத்துல இல்ல, ரெண்டு பேரும் ஒரே நாள்ல ஈரோட்டுல இருந்திருக்காங்க, அது சி.டி.ஆர்-ல (CDR) தெரியுது. அப்புறம் எல்லா சி.டி.ஆர் காப்பிலயும் அங்கங்க இருந்திருக்காங்கன்னு தெரியுது' - அதைத் தவிர அவங்ககிட்ட எந்த சாட்சியமும் இல்லை.
முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், செந்தில் பாலாஜி, குறிப்பாக திமுக மீது களங்கம் விளைவிக்கும் வகையில்.. நேத்து வரைக்கும் அரசு தரப்புல 'அரசை கவிழ்க்கும் எண்ணத்தோடு இது செய்யப்பட்டது' அப்படின்னு சொல்லிட்டே வந்தாங்க. நேற்று ஒரு மூன்று, நான்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை வந்து போலீஸ் காவலில் எடுப்பதற்கு போடப்பட்ட மனுவில் கூட, 'இது அரசை கவிழ்க்கும் எண்ணத்தோடு செய்யப்பட்டது'ன்னு போட்டாங்க.
நீக்கியது தவெக ஆர்சு
நேற்று நாங்க முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எடுத்து சொன்னோம். சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பது என்பது ஆட்டோமேட்டிக்கா அரசை கவிழ்ப்பது ஆகாது, அரசை அப்படி கவிழ்க்க முடியாது. சபாநாயகர் தேர்தல்ல வந்து ஒருமித்த கருத்தோடு தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்ப அரசை கவிழ்க்கிறதாக இருக்குதுன்னு சொல்றது புகார்ல அவங்களா எழுதிக்கிட்டாங்களே தவிர, புகாரிலேலே அந்த திருநாவுக்கரசு வந்து அரசை கவிழ்க்கணும்னு எங்கயும் சொன்னதாக எங்கேயுமே இல்லை."
ஆனால் காவல்துறையினரும் அந்த செய்திக்குறிப்பிலும் 'அரசை கவிழ்க்கும், அரசை கவிழ்க்கும்'ன்ற வார்த்தையை சேர்த்து சேர்த்து எழுதிட்டே வந்தாங்க. இத நாங்க நேற்று நாங்கள் கோர்ட்ல எடுத்து ஆர்கியூ பண்ண உடனே, இன்னைக்கு செந்தில் பாலாஜிக்கும் அசோக் குமாருக்கும் அந்த ஜாமீன் மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட, அந்த கவுண்டர் அபிடவிட்ல 'அரசை கவிழ்க்க வேண்டும்' அப்படிங்கிற வார்த்தையை நீக்கிவிட்டார்கள்.
ஆதாரமே இல்லை
அப்ப அந்த மொத்த முதல் தகவல் அறிக்கையுமே நீர்த்துப் போய், இப்ப சொல்லப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்களே இல்லாம இருக்கு. நீதிமன்றம் எல்லாத்தையும் கவனத்தில் எடுத்திருக்காங்க. முழுமையான உத்தரவு எங்களுக்கு இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
முழுமையான உத்தரவு கிடைச்ச பிறகுதான் அதனுடைய சாராம்சம் நமக்கு தெரியவரும். ஆனா இப்ப நிபந்தனை ஜாமீன் கொடுத்திருக்காங்க ரெண்டு பேருக்கும். அரெஸ்ட் பண்ண முடியாது. தினந்தோறும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலையிலும் மாலையிலும் கையெழுத்திட வேண்டும் எனும் நிபந்தனையுடன் உத்தரவு வந்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications