இன்று இரவே கடுமையாக தாக்கப் போறோம்.. ஈரானை பகிரங்கமாக எச்சரித்த டிரம்ப்! எகிறும் பதற்றம்
வாஷிங்டன்: இன்று இரவே ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் ஈரான் செயல்பாடுகளில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானுடன் உடன்பாடு எட்டுவது என்பது காலத்தை வீணடிக்கும் செயல் என்று காட்டமாக கூறியிருந்த டிரம்ப், ஈரான் மீது இன்று இரவு கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

ஒரே நாளில் 3 கப்பல்கள் மீது தாக்குதல்
அமெரிக்கா - ஈரான் இடையே நிரந்தர போர் நிறுத்தம் கொண்டு வரும் நோக்கில் இடைக்கால ஏற்பாடாக முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடுகளை ஈரான் தளர்த்தியது. இதையடுத்து இருநாடுகளும் பாகிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்துடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தன.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா கோபம் அடைந்தது. ஈரானில் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற மூன்று கப்பல்கள் மீது ஒரே நாளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இன்று இரவே தாக்குதல் நடத்துவோம்
இதனால் கோபம் அடைந்த டிரம்ப், போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் செயல்பாடு தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறியுள்ள டிரம்ப் இது தொடர்பாக துருக்கியில் நேட்டோ உச்சி மாநாட்டின் போது பேசியதாவது:-
டிரம்ப் பேசியது என்ன?
ஈரான் மீது முந்தைய இரவில் கடுமையான தாக்குதல் நடத்தினோம். இன்று இரவு மீண்டும் மிக மிக கடினமான தாக்குதலை நடத்தப்போகிறோம். ஈரானுக்கு நான் எச்சரிக்கையை விடுக்கிறேன். இன்று இரவு கடுமையாக தாக்கப்போகிறோம்" என்றார். ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் உச்சம் தொட்டுள்ளது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்னெய் விலையும் உடனடியாக 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பு நிலை திரும்பியதால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் சீராக தொடங்கிய நிலையில், அமெரிக்கா மீண்டும் ஈரானை கடுமையாக தாக்க இருப்பதாக கூறியுள்ளதால் மீண்டும் எண்னெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications