சுத்த டைம்வேஸ்ட்.. கடுங்கோபத்தில் கொந்தளித்த டிரம்ப்.. ஈரான் போர் நிறுத்தம் ரத்தானதும் காட்டம்
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டு இருந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் இனறு ரத்து செய்தார். மேலும் இனி ஈரானுடன் எந்த விதமான டீல் செய்யவும் விரும்பவில்லை. அவர்களுடன் பேசுவது நேரத்தை விரயமாக்கும் செயல் என்று கோபமாக கூறியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.

அதுமட்டுமின்றி அமெரிக்கா அவ்வப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்தது. நேற்றைய தினம் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 வர்த்தக கப்பல்களை தாக்கிய புகாரில் அமெரிக்கா மொத்தம் 80க்கும் அதிகமான இடங்களில் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது. அமெரிக்காவிற்கு பதிலடியாக ஈரானும், பஹ்ரைன் உள்பட பிற நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்களை குறிவைத்து 'அட்டாக்'கை தொடங்கியது. இதனால் கோபமான டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா - ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
துருக்கி தலைநகர் அங்காராவில் 2 நாள் 'நேட்டோ' நாடுகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக தான் டொனால்ட் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் ரத்தானது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுபற்றி டொனால்ட் டிரம்ப், ''என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. இனி அவர்களுடன் (ஈரானுடன்) எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.
அவர்களுடன் ஒப்பந்தம் செய்வது என்பது நேரத்தை விரயமாக்கும் செயல். அவர்கள் மிகவும் மோசமானவர்கள். கசடு என்று சொல்லலாம். அவர்கள் அப்படித்தான். அவர்கள் தங்களின் மனதளவில் வக்கிரமானவர்களாக உள்ளனர். அவர்களை வழிநடத்துபவர்களும் அப்படித்தான் இருக்கின்றனர்.
அவர்கள் கொடூரமான, வன்முறை குணம் கொண்டவர்கள். ஒருவேளை அவர்களிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால், அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை இது முடிந்துவிட்டது'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஈரான் மீது டொனால்ட் டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார்.
தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் நடந்து வரும் நிலையில் வரும் நாட்களில் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூட வாய்ப்புள்ளது. இது நடந்தால் மீண்டும் இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய், கேஸ் சப்ளையில் பாதிப்பு வரும் அபாயம் ஏற்படும்.















Click it and Unblock the Notifications