கிண்டலுக்கு உள்ளாகும் திருமாவளவன் பேச்சு.. ஊடகங்கள் திரித்து பரப்புவதாக விளக்கம்
அரியலூர்: தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்று இருந்தாலும், திமுக தலைவர் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு தொடர்ந்து கொண்டே இருக்கும், தவிர்க்க மாட்டேன் என திருமாவளவன் பேசியதை இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து என்று கிண்டலாக கூறியிருந்தார். இதேபோல் தவெக அமைச்சரவையில் உள்ள திருமாவளவனின் விசிக, திமுக கூட்டணியுடன் நட்புடன் உள்ளதாக கூறுவதை பலரும் கிண்டல் செய்கிறார்கள். ஊடகங்களும் திருமாவளவனை சராமரியாக கிண்டல் செய்கிறது. இதற்கு பதில் அளித்துள்ள திருமாவளவன் நான் சொல்கிற கருத்தை ஊடகங்கள் திரித்து பரப்புவதாக நினைக்கிறேன் என்று கூறினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அக்குழு தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அவரவர்களின் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விளக்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், "தற்பொழுது உள்ள புதிய 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நாடாளுமன்றத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். மகாத்மா காந்தி பெயரில் இருந்த இந்த திட்டத்தை மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டு புதிய பெயரில் அறிவித்துள்ளார்கள். இது காந்தியடிகளின் மீதான வெறுப்பை உமிழ்வது போல் உள்ளது. 125 நாள் என்று உயர்த்தி இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் தேவையான அளவிற்கு போதுமான நிதியை ஒதுக்க தயங்குகிறார்கள், மறுக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாஜக எண்ணம்.
ஆனால் வெளியில் ஒரு மாதிரி பேசுகிறார்கள்.. நிதியை ஒதுக்கீடு செய்வதில் வஞ்சகமாக செயல்படுகிறார்கள். இது எல்லாம் நாடாளுமன்ற அவையிலே நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம். கண்டித்து உள்ளோம். இதனால் இத்திட்டத்தில் மாநில அரசு பங்கேற்க வேண்டும் என்ற நடைமுறை ஏற்புடையதாக இல்லை. இதை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.
தவெக ஆட்சியில் நல்ல முயற்சிகள்
தவெகவின் இரண்டு மாத ஆட்சி குறித்து கேட்கிறீர்கள்.. நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நான் நம்புகிறேன். இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். தற்போதுள்ள கூட்டணி குறித்த குழப்பம் குறித்த கேள்விக்கு ஒன்று சொல்கிறேன்.. நான் தமிழ் பேசத் தெரியாமல் பேசுகிறேனா என்ன தெரியவில்லை. நான் சொல்கிற கருத்தை திரித்து பார்ப்பதாக தான் நான் நினைக்கிறேன். ஊடகவியலாளர்களை சந்திக்க வேண்டாம் என எண்ணம் தோன்றுகிறது. அவர்கள் கேட்ட கேள்வி, நீங்க அமைச்சரவையில் சேர்ந்தவுடனே திமுகவுடன் கூட்டணி முறிந்ததாக தானே அர்த்தம்.. அப்போது என்ன பதில் சொன்னேன் என நேற்று விளக்கினேன்.. கடந்த காலங்களில் என்ன சொன்னேன் என்பதை கூறினேன்.
அமைச்சரவையில் இடம்
நாங்கள் வெளியிலிருந்து தான் ஆதரவு என்று தான் சொன்னோம் அதுதான் உண்மை. தவெக தரப்பில் நீங்கள் ஏன் வெளியிலிருந்து ஆதரவு தர வேண்டும்.. நீங்கள் அமைச்சரவையில் சேர வேண்டும் என அவர்கள் தரப்பில் சொன்னார்கள்.. ஆனால் நான் உடன்படவில்லை.. ஆனால் எனது கட்சி அமைச்சரைவையில் இடம் பெறுவதில் எந்த தப்பும் இல்லை என முடிவெடுக்கப்பட்டது.. இதை அடுத்துதான் 21ஆம் தேதி தான் அமைச்சரவையில் சேர்வது முடிவு எடுத்தோம்.
திமுக உடன் உறவு முறையில்லை
அந்தக் காலத்தில் நான் சொன்னது திமுகவுடன் உறவை முறித்துக் கொள்ளவில்லை என கூறினேன். அதில் என்ன தப்பு இருக்கிறது என தெரியவில்லை. மற்றொரு கூட்டணிக்கு சென்றதால் அந்த கூட்டணி முறிந்து விட்டது என்ற அர்த்தம் அல்ல.. ஒரு கூட்டணி உருவாகிவிட்டது என அர்த்தம் இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமென்றால் நான் ஆதரவை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தத்தில் நான் சொன்னேன். ஒரு கூட்டணி இருந்தால் இன்னொருத்தருடன் நட்பாக இருக்கக் கூடாதா.. இந்த கூட்டணியில் இருந்தால் மற்றவருடன் உறவாக இருக்கக் கூடாதா. இது தமிழ்நாட்டில் மட்டும் ஒரு அருவருக்கத்தக்க அரசியல் உள்ளது.
வடமாநிலங்களில் நட்பு
வட மாநிலங்களில் அப்படி இல்லையே.. காங்கிரஸின் கூட்டணியில் இருப்பவர்கள் பாஜகவுடன் உறவில் இருக்கிறார்கள் பாஜகடன் கூட்டணியில் இருக்கிறவர்கள்.. காங்கிரஸாருடன் நட்புகளில்தான் இருக்கிறார்கள். ஏன் அந்த நாகரிகம் தமிழ்நாட்டில் வரக்கூடாது. ஏன் அந்தப் பொருளில் புரிந்து கொள்ளக்கூடாது.. ஏன் சொல்லக்கூடாது ஏன் அந்த பொருள் புரிந்து கொள்ளக்கூடாது.. இங்கே என்னென்ன அங்கே இரு இல்லைனா.. இங்கே இரு என்ற அரசியல் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
உதவி பேராசிரியர் நியமனம்
உதவி பேராசிரியர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேள்விக்கு, உதவி பேராசிரியர்கள் தேர்வு முடிவுகள் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. நிச்சயம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் சந்தித்து நாங்கள் முறையிடுவோம்.. இதனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களின் உணர்வை மதித்து அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்துவோம் என கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கு கேள்விகள்
இந்தியா கூட்டணியில் திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு எங்கள் கட்சியிலிருந்து முன்னாள் எம்எல்ஏவை திமுக சேர்க்கிறார்கள்.. அன்று இரவு வரை திமுக அமைச்சர் உடன் தொடர்பில் தான் இருந்தேன். அதற்குப் பின்னால் டில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் நான் பங்கேற்ற போது, காங்கிரஸ் தனது அணுகுமுறை மாற்றிக் கொள்ள வேண்டும்.. தேர்தல் காலங்களில் கேரளாவில் நடந்து கொண்ட அணுகுமுறை, மேற்கு வங்காளத்தில் நடந்து கொண்ட அணுகுமுறை, தமிழ்நாட்டில் நடந்த கொண்ட அணுகுமுறை, ஆளும் கட்சி உடன் முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. அப்படி இருந்தால் இந்திய கூட்டணி எப்படி வலுவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பினேன்.
திமுக உடன் நட்பு
எங்கள் கட்சியில் இருந்து ஒருவரை திமுகவில் சேர்ந்து விட்டார்கள் என்பதற்காக திமுகவை எதிர்த்து பேச வில்லை.. தேசிய அளவிலான பார்வையில் இருந்து தான் அந்த கருத்தை கூறினேன். எனது தனிப்பட்ட பார்வை அல்ல. தேசிய அளவில் பிஜேபிக்கு எதிரான அணிய கட்டமைக்க வேண்டும். அந்த அணியில் திமுகவும் இருக்க வேண்டும், தவெகவும் இருக்க வேண்டும்.. இதனை தமிழக அரசு அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ள முடியா..
திமுக தவெக ஒரே அணியில்
இவர் என்ன குழப்புகிறார்கள் என்று சொல்வார்கள்.. திமுகவுக்கும் தவெகவிற்கும் எதிரும் புதிருமான நிலை இருந்தாலும் கூட, தேசிய அளவில் மதவாத அரசியல் எதிர்ப்பதற்கு கொள்கை எதிரியாக சொல்ல கூடிய தவெகவும் இருக்க வேண்டும்.. தொடர்ந்து பாஜக எதிர்கின்ற திமுகவும் இருக்க வேண்டும்.. இதை சொல்லியிருந்தால் திருமாவளனுக்கு என்ன ஆயிற்று என்கிறார்கள்.. இது அவர்கள் பார்வையில் உள்ள சிக்கலைத் தவிர.. என் பார்வையில் உள்ள சிக்கல் அல்ல.. இந்தியா கூட்டணியில் சேர்வதற்கு திமுகவிற்கு அழைப்பு விடுப்பீர்களா என்று கேட்கிறீர்கள். அது பற்றி பார்ப்போம்" இவ்வாறு திருமாவளவன் கூறினார்.














Click it and Unblock the Notifications