Onam Bumper Lottery: ஓணம் பம்பர் லாட்டரியில் இன்ப அதிர்ச்சி.. முதல் பரிசு ரூ.30 கோடியாக உயர்வு.. குஷியில் சேட்டன்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் மிகவும் பிரபலமான ஓணம் பம்பர் லாட்டரியின் (Onam Bumper Lottery) பரிசுத்தொகை ரூ.25 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஓணம் லாட்டரியின் பரிசுத்தொகை ரூ.25 கோடியாக உயர்த்தப்பட்ட நிலையில், நான்கே ஆண்டுகளில் மேலும் ரூ. 5 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது.. அதே சமயம் ஓணம் பம்பர் டிக்கெட் விலையில் எதுவும் மாற்றப்படவில்லை என்பதால் கேரள சேட்டன்கள் குஷியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளை மாநில அரசே அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. தினம் தோறும் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல, சீசனுக்கு ஏற்றார் போல் ஆண்டுக்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.30 கோடியாக உயர்வு
இந்த பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு பல கோடி ரூபாய் முதல் பரிசாக வழங்கப்படும் என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். குறிப்பாக ஓணம் பம்பர் டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்பட்டு வந்தது. நாட்டிலேயே லாட்டரி டிக்கெட்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச பரிசுத்தொகையாக இதுவே இருந்த நிலையில் தற்போது கேரள அரசு இந்த ரெக்கார்டை முறியடித்துள்ளது.
அதாவது ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசுத்தொகை ரூ.30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. டிக்கெட் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முன்பை போலவே ரூ.500 க்கே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பம்பரில் முதல் பரிசுத்தொகை முன்பைவிட 5 கோடி ரூபாய் உயர்த்தி 30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை எப்போது?
லாட்டரி பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து கேரள லாட்டரித்துறை இயக்குனர் அஞ்சு கூறியதாவது:- ஓணம் பண்டிகை விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விரைவில் விற்பனைக்கு விடப்பட உள்ளன. அதாவது வரும் 17 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும். டிக்கெட்டிற்கான குலுக்கல் செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறும். மொத்தம் 10 சிரீயஸ்களில் டிக்கெட்டுகள் அச்சிடப்படும். 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
ஓணம் பம்பரின் பரிசுத்தொகை விவரம்:
* முதல் பரிசு - ரூ.30 கோடி
* 2-வது பரிசு - ரூ.1 கோடி (20 டிக்கெட்டுகளுக்கு)
* 3-வது பரிசு - ரூ.25 லட்சம்
* 4-வது பரிசு - ரூ.5 லட்சம் (10 டிக்கெட்டுகளுக்கு)
* 5-வது பரிசு - ரூ.2 லட்சம்
* 6-வது பரிசு - ரூ.5 ஆயிரம் (54 ஆயிரம் பேருக்கு)
* 7-வது பரிசு - ரூ.2 ஆயிரம் (81 ஆயிரம் பேருக்கு)
* 8-வது பரிசு - ரூ.1,000 (1,24,800 பேருக்கு)
* 9-வது பரிசு - ரூ.500 (2,75,400 பேருக்கு)
* ஆறுதல் பரிசு - ரூ.5 லட்சம் (9 டிக்கெட்டுகளுக்கு)
மான்சூன் பம்பர் குலுக்கல்
கடந்த 2022 ஆம் ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெடிற்கான பரிசுத்தொகையை ரூ.25 கோடியாக உயர்த்தியிருந்த நிலையில் நான்கே ஆண்டுகளில் மேலும் 5 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளது கேரள அரசு. கேரளாவில் தற்போது மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளுக்கான விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ.10 கோடியாகும். குலுக்கல் வரும் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.250 ஆகும். குலுக்கலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கேரளாவில் டிக்கெட் விற்பனை அனல் பறக்க நடந்து கொண்டு இருக்கிறது.














Click it and Unblock the Notifications