மாறன் பதவி விலக கூறுகிறார் ஜெ.
மதுரை:
தூர்தர்ஷன் தேசிய ஒளிபரப்பில் ஹிந்தி திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பப் பட வேண்டும் என்று மத்திய அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்காததையடுத்து, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர்.சிலையைத் திறந்து வைத்துப் பேசிய அவர் கூறியதாவது:
தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் ஹிந்தித் திரைப்படங்களுக்கு கொடுக்கப்படும் தொகையை ரூ 8 லட்சத்திலிருந்து ரூ 12 லட்சமாக பிரச்சார் பாரதி உயர்த்தியுள்ளது.ஆனால் மண்டல ஒளிபரப்பு மூலம் ஒளிபரப்பப்படும் படங்களுக்கு ரூ. 1 லட்சம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த பாரபட்சமான முடிவை வாபஸ்பெற வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் அரசனூரில் திமுக தொண்டர்கள், அதிமுக கிராம பஞ்சாயத்துத் தலைவரையும், காங்கிரஸ் தொண்டரையும் தாக்கியுள்ளனர்.இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கைது செய்ய போலீஸார் தவறி விட்டனர்.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் முதல்வர் கருணாநிதிக்குத் துளி கூட இல்லை. என்னை அரசியல் வாழ்க்கையிலிருந்து துரத்தவேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார் என்றார் ஜெயலலிதா.
சிலை திறப்பு விழா முடிந்ததும் திங்கள்கிழமை நள்ளிரவு ஜெயலலிதா மதுரைக்குச் சென்றார். அங்கிருந்து அவர் செவ்வாய்க்கிழமை சென்னைக்குத்திரும்புவார் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications