இஸ்ரேல் ஹெலிகாப்டர்கள் ஊடுறுவியதாக லெபனான் புகார்
பெய்ரட்:
லெபனானின் தெற்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் இரண்டு இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர்கள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகலெபனான் கூறியுள்ளது.
இதுதவிர மேலும் 5 ஹெலிக்காப்டர்கள் அதே பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும் லெபனான் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்தநடவடிக்கை ஆக்கிரமிப்புக்குச் சமமானது, போருக்கு அழைப்பு விடுப்பது போலாகும் என்றும் லெபனான் கூறியுள்ளது.
லெபனான் அதிபர் எமிலி லாகூட் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், லெபனானில் உள்ள லிடானி ஆற்றுப் பகுதியில் இஸ்ரேல் நாட்டின் 2ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது லெபனான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது போல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் சென்றதை இஸ்ரேலும் மறுக்கவில்லை. இஸ்ரேல் ராணுவ தரப்பில் வெளியான அறிக்கையில், இஸ்ரேலின்பாதுகாப்பைக் கருதியும், இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற 3 இஸ்ரேல் ராணுவ வீரர்களைத்தேடுவதற்காகவும்தான் அங்கு ஹெலிகாப்டர்கள் சென்றன என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் ஹெலிகாப்டர்கள் தனது எல்லைக்குள் வந்து சென்றது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் லெபனான் புகார் கூறியுள்ளது. ஐ.நா.வுக்கான லெபனான்சிறப்பு பிரதிநிதி ரோல்ப் நட்சன் கூறுகையில், இஸ்ரேலின் செயல் லெபனானுக்கு வருத்தத்தை அளித்துள்ளது என்றார்.
இதற்கிடையே, கடத்தப்பட்ட தனது வீரர்களை மீட்பதற்காக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது இஸ்ரேல் கமாண்டோபடை வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தலாம் என்று தெரிகிறது.
தெற்கு லெபனானின் கோலன் குன்றுகளை இஸ்ரேல் கடந்த 22 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புச் செய்திருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் அங்கிருந்துவெளியேறியது. அதன் பின்பு முதல் முறையாக இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் கோலன் குன்றுகளுக்கு வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.