சட்டசபையில் வீரப்பன் .. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை:
தமிழக சட்டசபையில் ராஜ்குமார் விவகாரம் குறித்து உடனடி விவாதம் நடத்த, சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து, சபையிலிருந்து எதிர்க்கட்சிகள்வெளிநடப்புச் செய்தன.
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் திங்கள் கிழமை தொடங்கியது. செவ்வாய் கிழமை காலையில் கேள்வி நேரம் முடிந்ததும் ஜீரோநேரத்தில் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று த.மா.கா. பிரச்னையைக் கிளப்பியது.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் 100 நாட்களை தாண்டிவிட்டதால் அது குறித்து உடனடி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று த.மா.கா., அ.தி.மு.க.உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.
மேலும் ராஜ்குமாரை மீட்கும் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனைக் கைது செய்ய வேண்டும். அவர் தேசவிரோதி என்று எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆனால் சபாநாயகர் பழனிவேல்ராஜன் வீரப்பன் விவகாரம் சட்டசபையில் நவம்பர் 9 ம் தேதி தான் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட, சோ.பாலகிருஷ்ணன், ராஜ்குமார் எப்போது விடுவிக்கப்படுவார் என்பதை நாடு முழுவதுமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனால் ராஜ்குமார் விவகாரம் குறித்து மிக, மிக, விரைவாக இன்றே விவாதிக்க வேண்டும்.
அரசுத் தூதர் கோபால் காட்டுக்குச் சென்று வீரப்பனைச் சந்திப்பதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், நெடுமாறன் போன்ற தேசவிரோதிகள், ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் செயல்பட விடக் கூடாது.
நெடுமாறன் தூதராக சென்ற பின்தான், வீரப்பனின் மறைவிடத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் கொடி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி கூறுகையில், நெடுமாறன் தூதராகக் காட்டுக்குச் செல்லும் முன்பே வீரப்பன் தமிழர் தேசிய இயக்கக் கொடியைவைத்திருந்தார் என்றார்.
மேலும் ராஜ்குமார் விவகாரம் தொடர்பாக சபையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் ஏற்கனவே ஒரு ஒத்திவைப்புத்தீர்மானத்தை த.மா.கா. அளித்துள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்று உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் எழுந்து வலியுறுத்தினார்.
அவரது வாதத்தை அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மற்றும் தேசிய லீக் உறுப்பினர்கள் ஆதரித்து குரல் கொடுத்தனர். இதனால் சபையில்பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சிகளின் திடீர் கோரிக்கையை ஏற்க இயலாது என்றும், 9-ம் தேதி இதுபற்றி விவாதிக்க தாம் அனுமதிப்பதாகவும் சபாநாயகர்பழனிவேல்ராஜன் கூறியதை எதிர்க்கட்சிகள் கண்டு கொள்ளவேயில்லை. இப்போதே இப்பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இப்பிரச்னை பற்றி பேசவே, சபையில் குழப்பம் நிலவியது. இறுதியாக இப்பிரச்னை பற்றி உடனடிவிவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்ததை ஆட்சேபித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதில் த.மா.கா. அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட்மாரக்சிஸ்ட்,தேசிய லீக் மற்றும் பார்வார்டு பிளாக் ஆகிய கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து சபையில் துணை மானியக் கோரிக்கையை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்து பேசினார். பின்னர் அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு சபையில்நிறைவேற்றப்பட வேண்டும். எதிர்க் கட்சிகள் அனைத்தும் செவ்வாய்க் கிழமை சபையை புறக்கணித்ததால் முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்த துணைமானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை. எனவே, சபை 11 மணிக்கெல்லாம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் திட்டமிட்டபடி விவாதம் நடத்த முடியாத வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இல்லை. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள் மீண்டும்விவாதத்தில் கலந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக புறக்கணித்து விட்டனர்.
இதனால் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை துவக்கி வைக்க வேண்டிய முக்கிய எதிர்க் கட்சியான த.மா.கா. வராததினால்,விவாதத்தை நாளை புதன் கிழமை வைத்துக் கொள்ளலாம் என்று சபாநாயகர் அறிவித்தார்.
திட்டமிட்டபடி அலுவல்கள் நடைபெறததால் சபை11 மணியளவில் ஒத்தி வைக்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிநடப்பில் கலந்துகொள்ளவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications