சிகிச்சைக்காக மாறன் அமெரிக்கா செல்வாரா?
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை தமிழக கவர்னர் பாத்திமா பீவி நேரில்சென்று நலம் விசாரித்தார். சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்று தெரிகிறது.
மத்தியத் தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் கடந்த மாதம் 28 ம் தேதி கடுமையான ஒற்றைத்தலைவலி காரணமாக சென்னைஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
மாறனின் உடல்நிலையைப் பரிசோதிக்க ஹைதராபாத்திலிருந்து ஒரு டாக்டரும், டெல்லியில் இருந்து இரு டாக்டர்களும் அடங்கிய குழு வந்துள்ளது. மாறன்உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. சிகிச்சைக்காக மாறன், அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படலாம்என்ற ஒரு பேச்சும் இருக்கிறது.
இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாறனை செவ்வாய்க்கிழமை காலை கவர்னர் பாத்திமா பீவி சந்தித்து உடல்நலம்விசாரித்தார்.