பிரச்சனையில் சன் டிவி கோடீஸ்வரன்
சென்னை:
கோடீஸ்வரன், மகாலட்சாதிபதி ஆகிய நிகழ்ச்சிகளை சன் மற்றும் விஜய் டிவிக்களில் ஒளிபரப்புவதை தடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் பாலு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
சன் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவியில் மகாலட்சாதிபதி நிகழச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பரிசுப் போட்டி நிகழ்ச்சிகள் சூதாட்டம் போன்றவை. இந்தப் போட்டி நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மனதில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.போட்டிகளில் வழங்கப்படும் பரிசுகள் ஒரு கோடி மற்றும் ரூ 5 லட்சம்.
1955 ம் ஆண்டு பரிசு போட்டி சட்டம் பிரிவு 4 ன் கீழ் ஒவ்வொரு பரிசுப் போட்டியிலும் ஒரு மாதத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிசின் மதிப்பு இருந்தால்,அந்தப் பரிசுப் போட்டியை நடத்த சட்டப்படி அனுமதியில்லை.
எனவே கோடீஸ்வரன், மகாலட்சாதிபதி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதியளிக்க அரசுக்குத் தடை விதிக்க வேண்டும்.
மேலும் இந்த பரிசு போட்டிகளை சன் மற்றும் விஜய் டிவி நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புஅமைச்சகம், மாநில உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.