இந்தியாவுடன் சிங்கப்பூர் புதிய பொருளாதார ஒப்பந்தம்
சிங்கப்பூர்:
இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் முன்னிலையில் புதிய பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்தானது.
5 நாட்கள் சுற்றுப் பயணமாக ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், தனது மனைவி உஷாவுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அவருடன் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அனந்த குமார் மற்றும் எம்.பி.க்கள், அதிகாரிகள் குழுவினர் சென்றுள்ளனர்.சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், அந்நாட்டு ஜனாதிபதி நாதனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு முக்கியப்பிரச்சனைகள் குறித்து இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மேம்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அனந்த குமார், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்வி.ஜி.ஜார்ஜ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் முதலீடு ஆகியவற்றை மேம்படுத்துவது பற்றி ஆராய இந்திய நிதித்துறை அதிகாரிஜ.எஸ்.தத், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரி யே குங் ஆகியோர் தலைமையில் பணி முனைப்புக் குழு அமைக்கப்படுகிறது.இந்த ஒப்பந்தம் 3 ஆண்டுகள் அமலில் இருக்கும்.
முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே கலை மற்றும் கலாச்சாரம், பரிமாற்றம் தொடர்பாக மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
பத்திரிக்கைகள் பாராட்டு:
சிங்கப்பூருக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் குறித்து அந்நாட்டு பத்திரிக்கை தி ஸ்டெரய்ட் டைம்சில் மூன்றுபக்க கட்டுரை பிரசுரமாகியுள்ளது.
அதே போல் முதல் பக்கத்தில், நாராயணனின் மனைவி உஷா நாராயணன் அந்நாட்டு எம்.பி.யுன் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடியது குறித்தும்புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி ஒருவர் சிங்கப்பூருக்குப் பயணம் செய்வது இதுவே முதல்முறை.
இந்தப் பத்திரிக்கையில் இரு நாட்டின் பொருளாதாரம், தகவல் தொழில் நுட்பம் குறித்த மிகப் பெரிய கட்டுரை ஒன்றும் பிரசுரமாகியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.