முகாமுக்குத் திரும்பினர் அதிரடிப்படையினர்
ஈரோடு:
வீரப்பனைத் தேடிச் சென்ற அதிரடிப்படையினர் பயிற்சிக்காக முகாமிற்குத் திரும்பியுள்ளனர். அதே சமயம், உளவுப் படையினர் காட்டுக்குள் ஊடுருவியுள்ளனர்.
வீரப்பனைத் தேடி அதிரடிப்படை முழுமூச்சுடன் காட்டுக்குள் களமிறங்கியது. இந்த படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டாலும், அதில்பல்வேறு முட்டுக் கட்டைகள் ஏற்பட்டன.
குறிப்பாக மாயமாக மறையும் வீரப்பன் இருக்கும் இடம் எது என்று அவர்களால் சரியாக யூகிக்க முடியவில்லை. எனவே, வீணாகமலையேற்றத்தையும், காட்டுக்குள் அலைவதையும் தவிர்க்கும் பொருட்டு அதிரடிப்படையினர் முகாமிற்குத் திரும்பியுள்ளனர்.
காட்டுப் பகுதியில் போதுமான இன்பார்மர்கள் இல்லாமல் போனதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்பார்மர்களை தேடிஉளவுப் பிரிவினரும் காட்டுக்குள் புகுந்துள்ளனர்.
ராஜ்குமாரை விடுதலை செய்த பிறகு வீரப்பன் கும்பல் எங்கு சென்றனர் என்பதற்கான தடயம் கூட இந்த முறை கிடைக்கவில்லை.
வீரப்பன், அவனுடன் இருக்கும் தீவிரவாதக் கும்பல் ஆகியவை தங்கள் சென்ற பாதையில் சிறு தடயங்களைக் கூட விட்டு வைக்காமல் மறைந்துவிட்டனர்.
இவர்கள் மிகவும் அடர்ந்த காட்டுப் பகுதியாகவும், செங்குத்தான இடமாகவும் உள்ள குன்றிமலைப் பகுதிகளில் வீரப்பன் பதுங்கியிருக்கலாம் என்ற யூகத்தின்அடிப்படையில் இந்த மலைப் பகுதியை அதிரடிப்படை ஊடுருவியது. ஆனால் அங்கு வீரப்பன் தங்கியிருப்பதற்கான ஆதரப்பூர்வமான தகவல்கள் எதுவும் அதிரடிப்படையினருக்குக் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மலைப் பகுதியில் வாழும் மக்களிடம் வீரப்பன் பதுங்கியுள்ள இடம் குறித்து அதிரடிப்படையினர் கேட்டுத் தெரிந்து கொண்டு வருகின்றனர். இக்கிராம மக்கள் வீரப்பனைப் பற்றிய தகவல்களை அளிக்க முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து காட்டுக்குள் இருந்த அதிரடிப்படையினர் முகாமிற்குத் திரும்பி அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வீரப்பன் பதுங்கியுள்ள இடத்தை அறிய உளவுப் பிரிவினர் காட்டுக்குள் சென்றுள்ளனர். வீரப்பனுக்கு உணவு செல்லும் பாதை, அவனுக்குத் தகவல்கொடுக்கும் இன்பார்மர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்களை இவர்கள் சேகரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications