உசிலம்பட்டியில் பஸ்ஸை மறித்து ரூ.11 லட்சம் கொள்ளை
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசலம்பட்டி அருகே, பஸ்ஸை மறித்து ரூ 11லட்சம் ரூபாயை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாஜி என்பவர் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேஷியராக வேலை செய்து வருபவர் கருப்பையா.இந்நிறுவனத்திலிருந்து ஏலக்காய் மூட்டைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதற்கான பணத்தை வசூலிப்பது கருப்பையாவின் வழக்கம். சம்வபம் நடந்த நாளன்று இரவு பணம் வசூல் செய்ய கருப்பையா மதுரை சென்றார். மதுரையில் ரூ.11 லட்சம் வசூல் செய்த பின்பு தனியார் பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பஸ் உசிலம்பட்டிக்கு அருகே தொட்டப்ப நாயக்கனூர் பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பஸ்ஸை ஒரு கார் வழிமறித்தது.
பஸ் நின்ற பின் காரிலிருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் பஸ்ஸில் ஏறி கருப்பையா தங்களிடம் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிதாக பயணிகளிடம்கூறி விட்டு கருப்பையாவை பஸ்ஸிலிருந்து இறக்கினர்.
கருப்பையாவிடமிருந்து பணப்பைய பிடுங்கிக் கொண்டு அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. இந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.