விவசாயிகளுக்கு விஞ்ஞானியின் டிப்ஸ்
கோவை:
உலகமயமாக்கல் சூழலில் சந்தைக் கேற்ற முறையில் சாகுபடியை மாற்றிக் கொள்ள வேண்டும் என விவசாய விஞ்ஞானி எம். எஸ் சுவாமிநாதன்பேசினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 46 பேருக்கு பல்வேறு விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில், முன்னாள்மாணவர் விருதைப் பெற்ற விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் பேசியதாவது:
உலகமயமாக்கல் இன்னும் சில மாதங்களில் இந்தியாவிற்கு வரப் போகிறது. இந்த சந்தையை எதிர்கொள்ள இந்திய விவசாயிகள் தயாராக இல்லைஎன எத்தனை நாளைக்குத் தான் சொல்ல முடியும்.
இதே காரணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்திய வேளாண்மைக்கு நெருக்கடி நிலை தான் வந்து சேரும். இந்த நெருக்கடி நிலையைத் தவிர்க்க சரியானமுறையில் சாகுபடி செய்ய வேண்டும்.
பண்ணை நிலங்களை வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பயனற்ற தரிசு நிலங்களில் வீடு கட்டுதல், தொழிற்சாலைகள்அமைத்தல் வேண்டும்.
இப்போதுள்ள விவசாயிகளுக்கு சரியான ஆலோசனை கூற ஆள் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு நவீன யுக்திகள் கிடைக்காமல் போய் விட்டது.
எனவே, நவீன யுத்தியைக் கையாளவும், எதிர்வரும் பிரச்னையை எதிர்கொள்ளவும் மத்திய அரசும் வேளாண்மைத் துறையும் தக்க நடவடிக்கையை உரியகாலத்தில் மேற்கொள்ள வேண்டும்.
விவசாய விலை பொருளுக்கு விலை வீழ்ச்சி, உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவற்றைத் தவிர்க்க சந்தைக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்யும் யுக்தியைகையாள வேண்டும். இத்தகைய யுக்தியை அரசு தர வேண்டும்.
உதாரணமாக, ஆந்திராவில் புகையிலை விவசாயம் அதிகரித்து வருகிறது. இந்த புகையிலை உற்பத்தியை குறைக்கச் சொல்ல வேண்டும். புகைப் பிடிப்பதற்குஎதிரான பிரச்சாரம் மேற்கொண்டு வரும்போது, புகையிலை உற்பத்தியை குறைக்க வேண்டும் என்பதை விவசாயிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.
இன்னும் பத்து ஆண்டுகளில் புகையிலை உற்பத்தியை கணிசமாகக் குறைக்க வேண்டும். இந்த முறையை ஜப்பான் போன்ற நாடுகள் கையாள்வதால், சந்தைப்பொருளாதாரம் நன்றாக இருந்து வருகிறது என்றார் சுவாமிநாதன்.