இலங்கை வீரர்கள் சுட்டு தமிழக மீனவர் காயம்
சென்னை:
இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தமிழக மீனவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 8 ம் தேதி மீனவர்கள் வீரன், பாலையா, ரத்தினவேலு ஆகியோர் படகில் சென்றனர்.அவர்கள் அடுத்த நாள் காலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் மீனவர் வீரன் காயமடைந்தார். அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை இதர மீனவர்கள் கரைக்குக்கொண்டு வந்து சேர்த்தனர். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படை மீனவர்கள் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். இது குறித்தும்,இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஜெனிபர் சந்திரன்.