வெடிகுண்டுகளுடன் பாக். தீவிரவாதி கைது
டெல்லி:
டெல்லியை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டிருந்தது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த அல் பதார் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்ததீவிரவாதியை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியதாவது:
டெல்லியில் முக்கியமான இடங்களைத் தகர்க்கத் திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதியை கைது செய்துள்ளோம். அவர் பெயர் மசூத் உல் ஹக்.இவர் டெல்லியின் வடமேற்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வெல்டராகப் பணிபுரிந்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு இவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்துஆர்.டி.எக்ஸ்.வெடி பொருட்கள், டெட்டனேட்டர், மின்சார வயர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மேல் வெடிபொருட்கள் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரிடம் விசாரணை நடத்திய போது மசூத் உல் ஹக் போலீஸாரிடம் கூறிய வாக்குமூலத்தில், பாகிஸ்தானில் உள்ள மன்சேரா அருகேயுள்ள உகாய்யில் அல்பதார் தீவிரவாத அமைப்பு எனக்கு பயிற்சி அளித்தது. மேலும் எப்படி வெடிமருந்துப் பொருட்களை உபயோகப்படுத்துவது, ஏ.கே.47 துப்பாக்கிகளைப்பயன்படுத்தும் முறை, கமாண்டோ தாக்குதல், ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்துதல் ஆகியவை குறித்து பயிற்சியளித்தார்கள்.
1999 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அல்பதார் தீவிரவாத அமைப்பு கமாண்டர் இர்பான் ஜம்மு காஷ்மீரில் உள்ள அக்னோர் மூலம் இந்தியாவுக்குள்நுழைய உதவி செய்தார். மேலும் சில ஆயுதங்கள் வாங்குவதற்காக ரூ 25, 000 கொடுத்தார் என்றார்.
முன்னதாகப் போலீஸார் கூறுகையில், டெல்லியில் அவர் ஜூம்மா மசூதி அருகேயுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அங்கு தங்கிக் கொண்டு ஜம்முகாஷ்மீர், அஜ்மீர், ஆக்ரா, மும்பை ஆகிய பகுதிகளைச் சுற்றிப்பார்த்தார். ஹக் டெல்லிக்கு வருமுன் கிஸ்துவார் என்ற பகுதியில், ரியாஸ் என்பவருடன் வசித்துவந்தார்.
ஹக் கைது செய்யப்பட்டது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸாருக்குத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் அவரது கூட்டாளிகள் யாராவதுஇந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.