மண்ணாகிப் போன "மான்செஸ்டர்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் குடியரசு தினத்தன்று ஏற்பட்ட பூகம்பம் அங்குள்ள கட்ச் மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு எத்தனை வருடங்கள்ஆனால் மறக்காது.
52 வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பம் 40 வினாடிகள் நீடித்து குஜராத்தையே உலக்கி விட்டது. பூஜ், அகமதாபாத்,ராஜ்கோட், சுரேந்திரநகர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதுவரை 30,000 பேர் இறந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பொருட்சேதமும் சொல்ல முடியாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது. பலர் வீடுகளையும்,உறவினர்களையும் இழந்து அநாதைகளாகியுள்ளனர்.
இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் அகமதாபாத்தில் இயங்கி வந்த பல மில்களும், தொழிற்சாலைகளும் இடிந்து தரைமட்டமாகிவிட்டன.பாதிக்கப்படாத சில தொழிற்சாலைகளும், மில்களும் இன்னும் பூட்டியே உள்ளன.
பூகம்பம் ஏற்பட்டு 3 நாட்கள் ஆகியும், அகமதாபாத்தில் கடைகள், சந்தைகள், வியாபார ஸ்தலங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஆங்காங்கு வெகுஅரிதாக சில கடைகள் மட்டுமே தென்படுகின்றன. அவற்றின் உரிமையாளர்களும் கூட, வேகமாக வியாபாரத்தை முடித்து விட்டு தங்கள் வீடுகளுக்குத்திரும்பி விடுகிறார்கள். முடிந்த வரை குடும்பத்தினருடன் சேர்ந்து இருப்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.
வேன் டிரைவர் நூர் முகமது என்பவர் கூறுகையில், பூகம்பத்திற்குப் பின் நாங்கள் மிகவும் பீதியில் உள்ளோம். குறிப்பாக இரவு நேரங்களில் வெளியே எங்கும்செல்வதில்லை. பொருட்கள் போனதைப்பற்றிக் கூட நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
மக்கள் அனைவரும் காலை வேளைகளில் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாராவது உயிரிழந்து விட்டனரா என்று சடலங்களைத் தேடும் பணியில்ஈடுபடுகிறார்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளில் கிரேன்கள் மற்றும் புல்டோசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.மேலும் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
யு.என்.ஐ.