ஐ.சி.சி. கேப்டன் மீட்டிங் .. இந்தியா மிஸ்ஸிங்
மெல்போர்ன்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 10 கிரிக்கெட் அணிகளில் 8அணிகளின் கேப்டன்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ், வெஸ்ட் இண்டீஸின் ஜிம்மி ஆடம்ஸ், நியஸிலாந்தின் ஸ்டீபன் பிளம்மிங், ஜிம்பாப்வேயின் ஹீத் ஸ்ட்ரீக், பாகிஸ்தானின் மோயின் கான்,தென்னாப்பிரிக்காவின் ஷான் போலாக், ஸ்ரீலங்காவின் சனத் ஜெயசூர்யா, பங்களாதேசத்தின் நைமூர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் இந்திய, இங்கிலாந்து கேப்டன்கள் கலந்து கொள்ளவில்லை என்று ஐ.சி.சியின் தகவல் தொடர்பாளர் மார்க ஹாரிசன் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறுவதற்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை, மற்றும் கிரிக்கெட்டில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையே உள்ளஇடைவெளி குறித்து பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஐ.சி.சி.யின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சர்.பால் கன்டன் கிரிக்கெட் ஊழல் குறித்த தனது அறிக்கையை பிப்ரவரி 10ம் தேதி அளிப்பார்.இந்நிலையில், கிரிக்கெட் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஆஸ்திரேலியாவின் மார்க்வாஹ், பிப்ரவரி 6ம்தேதி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்நியமித்துள்ள, கிரெக் மெலிக்கின் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார்.