நிவாரணப் பொருட்கள் குஜராத் சென்றன
சென்னை:
தமிழக செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் குஜராத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளைப் பிரிவு கெளரவ செயலர் எம்.பார்கவி தேவேந்திரன், சென்னை மாண்டியத் சாலை அலுவலகத்தில் 24 மணிநேரமும் உதவிப் பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
ஆமதாபாத் செஞ்சிலுவைச் சங்கம் உடைகளை விட அதிகளவில் மருந்துப் பொருட்களும், மருத்துவர்களும் தேவைப்படுவதாக கோரியுள்ளது. மருத்துவர்கள்மருந்துகளுக்காக இச்சங்கத்தை நாடுகின்றனர்.
ரத்ததானம் செய்ய 1500 பேர் தயாராக உள்ளதாக தெரிவித்த பார்கவி தேவேந்திரன், தேவைக்கேற்ப ரத்தம் சேகரிக்கப்படும் என்றும்தெரிவித்தார்.
வேப்பேரியைச் சேர்ந்த மயூர் ஷா 4டிரக்குகள் உதவிப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும், நிவாரண நிதி வழங்க விரும்புவர்கள் இந்திய செஞ்சிலுவைச்சங்கக் கெளரவ செயலர்(தமிழ்நாடு கிளை) பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர, திருவில்லிக்கேணி விவேகானந்தா கேந்திரத்தைச் சேர்ந்த 25 இளைஞர்கள் குஜராத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.தனியார் பழ ரசபான உற்பத்தி நிறுவனம் 3லட்ச ரூபாய் மதிப்புள்ள பழரசங்கள் வழங்க உள்ளது.