முட்டைக்கு வந்த பெரும் வாழ்வு.. நாமக்கல்லுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்.. வரலாற்றில் இல்லாத மாற்றம்
நாமக்கல்: தினமும் பலருக்கு ஆம்லெட் அல்லது அவித்த முட்டை இல்லை என்றால் உணவு சாப்பிட உள்ளே போகாது. ஓட்டலுக்கு போனால் மாஸ்டர் ஒரு ஆம்லெட், ஒரு கலக்கி, ஒரு ஆப்பாயில் என்று கேட்காதவர்கள் மிகக்குறைவு.. அதேபோல் பிரியாணி வாங்குபவர்கள் முட்டை இல்லாமல் வாங்க வாய்ப்பே இல்லை. அந்த அளவிற்கு முட்டை அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த சூழலில் வரலாறு காணாத விலை உயர்வை முட்டை சந்தித்துள்ளது. நாமக்கல் மண்டலத்திலேயே ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.8 வரை உயர கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் முட்டை உற்பத்தி அதிகமாக நடக்கிறது. ஆந்திராவில் விஜயவாடா ஏலூரு பகுதிகளும், தமிழ்நாட்டில் நாமக்கல் தான் இந்தியாவின் முட்டை விலையை தீர்மானிக்கின்றன. தமிழ்நாட்டின் நாமக்கல் மண்டலத்தில் மட்டும் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து மட்டுமே நாள்தோறும் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இந்த முட்டைகள் தமிழக அரசின் மதிய உணவு திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நாமக்கல் முட்டைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல் கணிசமான அளவு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை உற்பத்தி, தேவைகளை பொறுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. முட்டை விலை கடந்த சில மாதங்களாகவே அதிகமாகவே இருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி முட்டையின் அதிகபட்ச விலையாக ரூ.6.40 ஆக இருந்தது. இதுதான் நாமக்கல் மண்டலத்தில் முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது. பின்னர் கணிசமாக குறைந்தது. ஆனால் கடந்த ஜூன் மாதம் பிறந்ததில் இருந்தே முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் 1-ந் தேதி முட்டை கொள்முதல் விலை ரூ.5.70 ஆக இருந்தது.
அதன்பின்னர் தினமும் 5 மற்றும் 10 காசுகள் வரை உயர்ந்த வண்ணம் இருந்தன. கடந்த ஜூன் 17-ந் தேதி முட்டையின் கொள்முதல் விலை ரூ.6.45 ஆக உயர்ந்தது. அது தான் முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது. இதையடுத்து 10 நாட்களுக்கு பிறகு ஜூன் மாதம் 26-ந் தேதி ரூ.6.50 ஆக விலை உயர்ந்தது. இந்த விலை கடந்த 10-ந் தேதி ரூ.6.55 ஆகவும், நேற்று முன்தினம் ரூ.6.60 ஆகவும் அதிகரித்தது.
இந்த நிலையில், நேற்று மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முட்டை வரலாற்றிலேயே ரூ.6.65 தான் அதிகபட்ச கொள்முதல் விலையாகும். கொள்முதல் விலை ரூ.6.65 ஆக உள்ள நிலையில் சில்லறை விற்பனையாக கடைகளில் ரூ.7.20 முதல் ரூ.8 வரையில் விற்பனையாகிறது. இந்த கொள்முதல் விலை 8 ரூபாய் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முட்டை விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் ஆம்லெட், ஆப்பாயில், புல்பாயில் மற்றும் கலக்கி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 20 ரூபாய் முதல் 25 ரூபாய் என்கிற அளவிற்கு ஆம்லெட், ஆப்பாயில் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல் கடைகளில் சிக்கன் மற்றும் எக்ரைஸ் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. முட்டை உற்பத்தி குறைந்துள்ளதுடன், அரசு பள்ளிகள் மற்றும் தமிழக அரசின் சத்துணவு திட்டங்களுக்கு அதிக அளவு முட்டைகள் அனுப்பும் தேவை உள்ளதால், முட்டைகளின் விலை அதிகரித்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.














Click it and Unblock the Notifications