100 கிராமங்கள் அழிந்தன
அகமதாபாத்:
குஜராத் மாவட்டத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்ச் மாவட்டத்திலுள்ள 100 கிராமங்கள் மண்ணோடு மண்ணாக அழிந்தன.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் பிணக் குவியல்களாகக் காட்சியளிக்கிறது. இங்கு ஒரு கட்டிடம் கூட இல்லைஎன்று கூறும் அளவுக்கு மயான பூமியாகி விட்டது கட்ச் மாவட்டம். இடிபாடுகளுக்குள் கிடந்த மீட்கப்பட்ட பிணங்கள் ஜாதி, மத, இனவேறுபாடின்றி எரிக்கப்படுகின்றன.
மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ஹெலிகாப்டர்கள் ஒருபுறம் வானில் வட்டமடித்தபடி வர இன்னொரு புறம் கழுகுகள் ஆயிரக்கணக்கில் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. வெளியே பிணமாகக் கிடப்பவர்களையும், இறந்து கிடக்கும் கால்நடைகளையும் கழுகுகள் தின்னும் சோகநிலை ஏற்பட்டுள்ளது.
கட்ச் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் மண்ணோடு மண்ணாக விழுந்தும், புதைந்தும் போய்விட்டன. அரசாங்கக் குடியிருப்புக்கள்அடியோடு விழுந்து விட்டன. தொலைத்தொடர்பு, மின்சாரம் ஆகியவை இன்னும் சீரமைக்கப்படவில்லை. ஜனவரி 26 ம் தேதியிலிருந்து அஞ்சார் பகுதியில் நிலஅதிர்வு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. உயிர்பிழைத்த ஒரு சிலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விட்டனர்.
ஒன்டா என்ற கிராமத்தில் 70 வயது முதிய பெண்ணை மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கிடையிலிருந்து மீட்டனர். அவருக்கு 2 மகன்கள், மருமகன்கள்,5 பேரக் குழந்தைகள் இருந்தனராம். அவர்கள் அனைவரும் பூகம்பத்தால் மண்ணில் புதைந்து விட்டனர்.
கட்ச் நகரில் ஒன்றரை லட்சம் மக்கள் இருந்தனர். வர்த்தகத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த கட்ச் இப்போது பாலைவனம் போல்காட்சியளிக்கிறது. அங்கு உயிர்பிழைத்த ஜே.எம்.சாதா கூறும்போது, எனது குடும்பம், உறவு, கடை அனைத்தையும் இழந்து வெளியேறுகிறேன் என்றுகண்ணீருடன் கூறினார். கட்ச் நகர் பழைய நிலைக்கு வர இன்னும் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
அகமதாபாத் நகரில் பூகம்பத்தால் விரிசல்கள் விழுந்த வீடுகளை மாநகராட்சி நிர்வாகம் இடித்து விட முடிவு செய்துள்ளது. மக்கள் வசிப்பதற்கு ஏற்றதல்லஎன்று கண்டறியப்பட்ட 17 கட்டிடங்கள் இடித்துத் தரைமட்டமாக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications