தமிழக சட்டசபைத் தேர்தல் தள்ளிவைப்பு
சென்னை:
ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் நடைபெறுவதாக இருந்த தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படும் எனத்தெரிகிறது.
இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் வரும் மார்ச் 26 ம் தேதி திங்கள்கிழமை சென்னை வருகிறார்.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 21 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குள் சட்டசபைத் தேர்தலை நடத்தி புதிய அரசு அமைக்க வேண்டும்.
வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் வாக்காளர்அடையாள அட்டை வழங்கும் பணி இன்னும் முடியாத காரணத்தால் தேர்தலை ஏப்ரலில் நடத்துவது முடியாத காரியம் என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறது.
மேலும் தமிழகம் தவிர சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள அசாம், மேற்குவங்காளம், கேரளா, பாண்டிச்சேரிக்கு சட்டசபைப் பதவிக்காலம் வரும் ஜூன்வரை இருப்பதால் தேர்தலை மே மாதத்தில் நடத்துவதில் பிரச்சனையில்லை என்று மத்திய அரசும் இதற்கு ஒத்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து மே முதல் வாரத்தில் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. ஆனால், இதற்கு தமிழக, கேரளதேர்தல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மே முதல் வாரத்தில் இந்த இரண்டு மாநிலங்களிலும் முக்கியத் திருவிழாக்கள் நடக்கவிருப்பதால் மக்கள்தேர்தலில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக எதிர்க் கட்சிகள் தேர்தலை தள்ளிவைப்பதை எதிர்க்கின்றன.
ஆயுதபேர ஊழல் எதிரொலியா?
ஆயுதபேர ஊழலால் பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற காரணத்தால் தான் தேர்தலை தள்ளிவைக்க மத்திய அரசு முயல்வதாக எதிர்க் கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.
இது தவிர வரும் ஏப்ரல் 16 ம் தேதி முதல் மே மாதம் 11 ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் எம்.பிக்கள் கலந்து கொள்ளவிருப்பதால் அவர்களால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது.
இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை தள்ளி வைப்பது குறித்து சபாநாயகரிடம் ஆலோசனை நடத்தி விட்டு தேர்தல் தேதி முடிவாகும் என்றுகூறப்படுகிறது.
இதற்கிடையே, மார்ச் 26 ம் தேதி சென்னை வரும் கில் கவர்னர் மாளிகையில் தமிழகத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி, தலைமைச் செயலர்ஏ.பி.முத்துசாமி, உள்துறை செயலர் ஏ.பி.சாந்தா ஷீலா நாயர், காவல்துறைத் தலைவர் ஆர்.ராஜகோபாலன் ஆகியோருடன் தமிழக சட்டசபைத் தேர்தல்குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி குறித்து ஆய்வு செய்து விட்டுப் பின்னர் அரசியல் கட்சி பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications