ஜெயலலிதாவின் வார்த்தைகளில் மயங்காதீர்கள்- கருணாநிதி
மேட்டூர்:
ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட நான் தான் காரணம் எனக் கூறும் ஜெயலலிதாவின் வார்த்தைகளை நம்பி மயங்கிவிடக் கூடாது என முதல்வர்கருணாநிதி பேசினார்.
மேட்டூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
ஜெயலலிதா நான்கு இடங்களில் மனுத் தாக்கல் செய்தார். அதனால் நான்கு மனுக்களுமே நிராகரிக்கப்பட்டு விட்டன. இதற்கு கருணாநிதி தான் காரணம் எனக்கூறி வருகிறார். அவர் சொல்லும் வார்த்தைகளை நம்பி மயங்கி விடாதீர்கள்.
தொழிலாளர்களுக்குப் பாடுபடும் அரசாக திமுக ஆட்சி விளங்கியது. கடந்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்களை வறுமைக்கோட்டிற்கு மேல் உயர்த்தியுள்ளோம்.
அரிசி, கரும்பு, தேங்காய், மரவள்ளிக் கிழங்கு, காய்கறி, தொழில் துறை ஆகிய உற்பத்தியில் தமிழகத்தை முதல் நிலையை எட்டச் செய்குள்ளோம்.
தமிழகத்திலிருந்து தான் அமெரிக்காவிற்கு அதிக அளவிலான சாப்ட்வேர் நிபுணர்கள் செல்கின்றனர். இங்குதான் அவர்களுக்கு அதிக எச்.1 பி விசாக்கள்வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஆட்சியை மாற்ற சிலர் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் இரண்டு அணிகள் தான் உள்ளது. ஒன்று திமுக அணி. மற்றொன்று அதிமுக அணி. இடையில் ஒரிரு அணிகள் புகுந்து கொண்டு யாருக்கோ அவர்கள்மறைகமாக உதவுகிறார்கள்.
அந்த அணி ஜெயலலிதாவிற்கு எதிரானது அல்ல. திமுகவிற்குத் தான் எதிரானவை. வாக்குகளைப் பிரித்து ஜெயாவுக்கு உதவுகின்றனர். எதிரிக்குக் கூட துணைபோகலாம். ஆனால், துரோகத்திற்கு துணைபோக கூடாது.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் தேர்தலில் ஜெயலலிதா நிற்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலை ஏற்படும் என அவருக்கு வெட்டவெளிச்சமாகத் தெரியும். இது எல்லோரும் எதிர்பார்த்தது தான்.
ஆனால், நிராகரிக்கப்பட்டதற்கு அவர்கள் என்ன விளக்கம் சொல்கின்றனர்? கேரளாவில் பாலகிருஷ்ணனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால்,எம்.பி.,எம்.எல்.ஏ.,வாக இருந்தால் அவரது மனுவை ஏற்றுக் கொள்ளலாம் என தேர்தல் விதிமுறை இருந்ததால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மனு நிராகரிக்கப்பட்டாலும் நான் தான் முதல்வர் என்கிறார். அவரது வார்த்தையில் மயங்கி ஆதரவு அளிக்கக் கூடாது. திமுக கூட்டணி நச்சயம் வெற்றி பெறும்என்பதில் ஐயமில்லை என்றார் கருணாநிதி.