நாளை ஓட்டு எண்ணிக்கை
சென்னை:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளஇடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
வாக்குகள் எண்ணப்படும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவு, பகலாக காவல் காத்து வருகிறார்கள். காலை 8மணிக்குத் தொடங்கும் ஓட்டு எண்ணிக்கை பிற்பகல் 2 மணிக்குள் முடிவடைந்து விடும்.
ஓட்டு எண்ணும் இடத்திற்குள் சூட்கேஸ், ரேடியோ, செல்போன், வாக்கிடாக்கி போன்ற கருவிகள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 101 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அடையாள அட்டை வைத்திருப்பவர்களும், மெட்டல்டிடெக்டர் கருவி வைத்திருப்பவர்களும் சோதனை செய்யப்பட்ட பிறகே வாக்குகள் எண்ணப்படும் இடத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
வாக்குகள் எண்ணும் மையத்தில் முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் முகவர்கள், மாநில கட்சிகளின் முகவர்கள்,அங்கீகரிக்கப்பட்ட பிற மாநில கட்சிகளின் முகவர்கள், சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள் என்ற வரிசைக்கிரமத்தில் அமரவைக்கப்படுவார்கள்.
வேட்பாளர்களும், அவர்களது தேர்தல் ஏஜன்டுகளும் மட்டுமே வாக்குகள் எண்ணும் கூடத்தில் அனைத்து பகுதிக்கும் செல்லஅனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.