பாண்டிச்சேரி முதல்வருக்கு எம்.எல்.ஏ. "சீட்" கிடைத்தது
பாண்டிச்சேரி:
தான் போட்டியிவதற்கு வசதியாக எம்.எல்.ஏ. யாரையாவது ராஜினாமா செய்ய வைக்க முயன்று முயன்று வெறுத்துப் போயிருந்தபாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகத்துக்கு உதவ இறுதியாக ஒரு எம்.எல்.ஏ. முன் வந்துள்ளார்.
இதனால் சண்முகம் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்காக தனது பதவியை ராஜினாமா செய்ய கோட்டுச்சேரிஎம்.எல்.ஏ. முன் வந்துள்ளார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி உள்ளது. இதற்கு ப.சண்முகம் தலைமை தாங்குகிறார். ஆனால் அவர்தற்போது எம்.எல்.ஏவாக இல்லை. அடுத்த மாதத்திற்குள் அவர் எம்.எல்.ஏவாகாவிட்டால் முதல்வர் பதவியை இழக்க நேரிடும்.
ஆனால், அவருக்கு உதவ காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் பதவியை ராஜினாமா செய்ய முன் வரவில்லை.
ஒவ்வொரு எம்.எல்.ஏவாக கூப்பிட்டு பேசிப் பார்த்தும் சரி வரவில்லை. இந் நிலையில் கோட்டுச்சேரி எம்.எல்.ஏ. நளமகராஜன் மற்றும்திருநள்ளாறு எம்.எல்.ஏ. கமலக்கண்ணன் ஆகியோரில் ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
அதிலும் நளமகராஜன் கண்டிப்பாக ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. மேலிடக் கட்டாயமே இதற்கு பின்னணியாககூறப்படுகிறது.
இதையடுத்து சண்முகம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வென்றால் தனது முதல்வர் பதவியைதக்க வைத்துக் கொள்ள சண்முகத்தால் முடியும்.
கடந்த தேர்தலில் நளமகராஜன் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ராமதாஸைத் தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார்.