தலிபான் ராணுவ முகாம் மீது கடும் தாக்குதல்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது 11 நாளாக அமெரிக்க விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தின.
இன்று நடந்த இத் தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் தெரிவித்துள்ளது.
இன்றைய தாக்குதல்களில் தலிபான்களின் ராணுவ முகாம்களும் பின்லேடனின் பயிற்சி முகாம்களும்தாக்கப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும் எரிபொருள் கிடங்குகளும் குறி வைத்துத் தாக்கப்பட்டுவருகின்றன.
தலிபான் ராணுவத்தின் 16வது டிவிஷனின் கட்டடமும் இன்று தகர்க்கப்பட்டது. இங்கு காலையில் இருந்து இன்னும்தீ எரிந்து வருகிறது.
கடந்த 10 நாட்களில் 2,000 குண்டுகளை வீசியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இன்றைய தாக்குதலில் காபூலில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் உணவுக் கிடங்கும் தாக்குதலில் இருந்துதப்பவில்லை. இங்கு தலிபான்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தாகக் கூறி கிடங்கை அமெரிக்க விமானங்கள்தாக்கின.
இதில் கிடங்கில் தீ பிடித்தது. பல நூறு டன் உணவுப் பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
தொடர்ந்து தனது ஏ.சி-130 ரக குண்டு வீச்சு விமானங்களையும் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இந்தவிமானங்கள் காபூலை தரைமட்டமாக்கி வருகின்றன.
இப் பகுதி பொது மக்கள் கூறுகையில், பெரிய சரக்கு விமானம் போலக் காணப்பட்ட இந்த விமானங்கள் மிகமெதுவாக குறைந்த உயரத்தில் பறந்து வந்தன. பின்னர் பெரிய குண்டுகளை வீசின. பெரும் சத்தத்துடன் அந்தப்பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடித்த இடத்தில் பெரும் சேதமும் ஏற்படுகிறது என்றனர்.
இந் நிலையில் அமெரிக்க ராணுவத்துக்கு உதவ ஈரான் முன் வந்துள்ளது.
தரையில் தாக்குதல் தொடங்கும்பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொள்ளும் அமெரிக்க ராணுவத்தினரைக்கண்டறியவும் அவர்களை மீட்க உதவவும் தயார் என ஈரான் கூறியுள்ளது.
இதே போன்ற உதவியை அளிக்க ரஷ்யாவும் முன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.