தாமரைக்கனி, மகன் மோதல் - ஸ்ரீவில்லிபுத்தூரில் பதட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவருக்கு திமுக சார்பில் போட்டியிடும் தாமரைக்கனியின் ஆதரவாளர்களுக்கும்,அவரது மகனும் அதிமுக எம்.எல்.ஏவுமான இன்பத்தமிழன் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில்அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை (இன்று) பதட்டம் நீடித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தாமரைக்கனியின் மகனும், அதிமுகஎம்.எல்.ஏவுமான இன்பத்தமிழன் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, தாமரைக்கனி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று வாக்குப் பதிவு நடைபெறுவதை பார்வையிட்டுச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரைத் தொடர்ந்து அவரது மகன் இன்பத்தமிழனும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவேட்பாளரும் சென்றனர்.
கம்மாபட்டி என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது இரு பிரிவினருக்கும் இடையே கடும்மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றியதால் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.
இதைத் தொடர்ந்து இன்றும் அந்தப் பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.