தர்மபுரியில் தேர்தல் கலவரம்: மண்டை, கார், வீடு, பைக் உடைப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாளைப்பள்ளியில் இரு கோஷ்டியினருக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் உட்பட 8 பேர் தாக்கப்பட்டனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
தர்மபுரி மாவட்டம் பாளைப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடராஜன் மற்றும் ஸ்டீபன் ஆகியவேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டனர்.
கடந்த 21ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஸ்டீபன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். நடராஜன்தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) நடராஜன் தனியாக மொபட்டில் சென்றுகொண்டிருக்கும் போது, 8 பேர்கொண்ட கும்பல் ஒன்று நடராஜனை வழிமறித்து தாக்கியது. இதில் நடராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் ஸ்டீபனின் ஆட்கள் தான் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் நடராஜனின் ஆதரவாளர்கள் 25 பேர் உருட்டுக்கட்டைகளுடன் வந்து ஸ்டீபன் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்கினார்கள். இதில் ஸ்டீபனுக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது.
பிறகு அவரது வீட்டையும் அடித்துச் சேதப்படுத்தினர். வீட்டின் படுக்கையறையைக் கூட அக் கும்பல் விடவில்லை.வீட்டிலிருந்த கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களையும் உடைத்தனர். வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளைஉடைத்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகக்கூறப்படுகிறது. தாக்குதலில் வீட்டிலிருந்த 8 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதட்டம் நீடிக்கிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்திவருகிறார்கள்.