கண்ணகியை "கல்லூரிக்கு அனுப்ப" தமிழக அரசு விருப்பம்
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையோரத்தில் இருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை, கடற்கரையை ஒட்டியுள்ளபிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) வளாகத்தில் நிறுவலாம் என்று தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.
சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக குறிப்பிட்டு விளங்கியது கண்ணகி சிலை. மெரீனாகடற்கரையோரம் அமைந்திருந்த அந்த சிலை சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.
சாலை விபத்தைக் காரணம் காட்டி சிலை அகற்றப்பட்டதை அனைத்து எதிர்க் கட்சிகளும் கண்டித்தன.இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வலம்புரி ஜான் உள்ளிட்ட நான்கு பேர் வழக்கும்தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், சென்னைப்பல்கலைக்கழக வளாகம், ராணி மேரி கல்லூரி வளாகம், மாநிலக் கல்லூரி வளாகம் மற்றும் மாதிரிப் பள்ளி வளாகம்ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் கண்ணகி சிலையை வைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலையை நிறுவுவது பொருத்தமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில்தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.
ஆனால் கண்ணகி சிலையை மீண்டும் முன்பிருந்த இடத்திலேயே வைக்க முடியாது என்பதையும் தமிழக அரசுஉறுதியாகக் கூறியுள்ளது.
இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதிமுருகேசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இவ்வழக்கின் இறுதித் தீர்பபை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அரசு பரிந்துரைத்துள்ள மாநிலக் கல்லூரி, முன்பு கண்ணகி சிலை இருந்த இடத்திற்கு எதிரே தான் உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.