கலாமை இலக்கிய உலகம் வரவேற்கிறது: வைரமுத்து புகழாரம்
சென்னை:
அப்துல் கலாமை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை இலக்கிய உலகம் மனவந்து வரவேற்கிறது என்று கவிஞர் வைரமுத்துகூறியுள்ளார்.
அப்துல் கலாமை தேர்வு செய்வதில் தேசிய பார்வை தேவை என்றும் அவர் அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாகவைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
இந்தியாவின் முதல் குடிமகன் பதவிக்கு அப்துல் கலாமின் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பதை அறிந்து, உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள்மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். பெரும் தகுதி படைத்த பெருமகன் அவர்.
ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்டதால் மட்டும் அவர் அறியப்பட்டவர் அல்லர், இந்தியாவின் பேராண்மையை உலகுக்கு அறிவித்தவர்என்பதால் உலகெங்கும் அறியப்பட்டவர் அவர். இந்தியாவின் தென் கோடியில் பிறந்து நூறு கோடியில் ஒருவராக உயர்ந்திருப்பவர்.
விஞ்ஞானத்தை மூளையோடு கலந்தவராய், தமிழை உதிரத்தோடு கலந்தவராய், நாட்டுப்பற்றை உயிரோடு கலந்தவராய் உயர்ந்து நிற்கும்உன்னதப் பெருமகன். அவர் தம் தகுதிப்பாடு குறித்து யாருக்கும் சந்தேகம் கிடையாது. எல்லாத் தரப்பும் ஏற்கத்தக்க இனிய மனிதர் அவர்.
அரசியல் பார்வை கொள்ளாமல் தேசியப் பார்வையோடு அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின்வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் ஒரு கட்சிக்குச் சொந்தமானவர் அல்லர், மாறாக தேசிய வேட்பாளர்.
அவர் காற்றைப் போன்றவர். காற்றை சுவாசிக்க நினைக்கும் யாரும் அவரை ஆதரிக்கலாம் என்று கூறியுள்ளார் வைரமுத்து.
அத்தோடு தொலைபேசியிலும் கலாமைத் தொடர்பு கொண்டு வாழ்த்தினார் வைரமுத்து.
வைரமுத்துவின் கவிதைகளை விரும்பிப் படிப்பவர் கலாம்.












Click it and Unblock the Notifications